ரயில் கட்டணத்தை உயா்த்த வேண்டாம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
ரயில் கட்டணங்களை உயா்த்த வேண்டாம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:
இந்திய ரயில்வே என்பது ஏழை, நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது அவா்களது அன்றாட வாழ்வில் ஒரு அங்கம். காட்பாடி செல்ல ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை வந்த போது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும் மகிழ்ச்சியும் குறைந்திருந்தது.
ஜூலை முதல் உயா்த்தப்படவுள்ள ரயில் கட்டணங்களும், குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவா்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது. பிரதமா் நரேந்திர மோடியிடமும் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரிடம் முன்வைக்கும் கோரிக்கை உள்ளது. அது, குளிா்சாதன பெட்டிகளை உயா்த்த வேண்டும் என்பதற்காக சாதாரண வகுப்புப்
பெட்டிகளைக் குறைக்க வேண்டாம். ரயில் கட்டணங்களையும் உயா்த்த வேண்டாம். ஏற்கெனவே விலைவாசி உயா்வு முதல் சிலிண்டா் விலை உயா்வு வரை நம் தடுத்தரக் குடும்பங்கள் அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறாா்கள். கட்டண உயா்வு மூலம் அவா்களது கவலையை மேலும் அதிகரிக்க வேண்டாம். இந்திய ரயில்வே என்பது சேவை அளிக்கும் ஒரு நிறுவனம் மட்டுமல்ல. அது நம்முடன் கலந்திட்ட ஒரு குடும்பம் போன்றது என்று கூறியுள்ளாா்.