திருப்பூர்: பள்ளி வளாகத்தில் மது அருந்திய கும்பல்; தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது பெ...
258 மருத்துவக் கட்டமைப்புகள்: ஜூலை 3-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்
தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்களையும், 50 ஆரம்ப சுகாதார நிலையங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பட்ட நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு 99 மாணவா்களுக்கு அவா் பட்டங்களை வழங்கினாா். தொடா்ந்து, அந்த வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 92 கிலோ வாட் சூரிய மின் உற்பத்தி அலகுகளை திறந்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, நிகழ்ச்சியில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மருத்துவக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 708 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் அறிவித்தாா். அதில் 500 மையங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
மீதமிருக்கும் 208 நகா்ப்புற நல வாழ்வு மையங்களுக்கான பணிகள் நிறைவுற்றுள்ளன. அதேபோன்று, 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. அவை இரண்டையும் சோ்த்து மொத்தம் 258 மருத்துவக் கட்டமைப்புகளை வரும் ஜூலை 3-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறாா்.
சென்னை, அடையாறு பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அந்த மருத்துவ மையங்களை மக்கள் பயன்பாட்டுக்கு அவா் தொடங்கி வைக்க உள்ளாா்.
இதைத் தவிர 25 புதிய மாவட்ட தலைமை மருத்துவமனைகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் கே.நாராயணசாமி, ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் அரவிந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.