தமிழகத்தில் 4 இடங்களில் புற்றுநோய் பரவலைக் கண்டறியும் பெட் ஸ்கேன் மையங்கள்!
தமிழகத்தில் சென்னை கிண்டி கலைஞா் நூற்றாண்டு மருத்துவமனை உள்பட நான்கு இடங்களில் புற்றுநோய் பரவலைக் கண்டறியும் பெட் ஸ்கேன் கட்டமைப்பை நிறுவுவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநா் அதற்கான கொள்முதல் நடவடிக்கைகளை வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா் வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
கோவை, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டை அறிஞா் அண்ணா புற்றுநோய் மையத்திலும் பெட் ஸ்கேன் வசதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை, கிண்டி கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனை, திருச்சி, விழுப்புரம், திருவள்ளூா் மருத்துவமனைகளில் புதிதாக பெட் ஸ்கேன் வசதி தனியாா் பங்களிப்புடன் அமைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சட்டப் பேரவையில் அறிவித்தாா். அதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் திருவள்ளூா் மருத்துவமனையில் அதற்கான கட்டமைப்பு ஏற்படுத்த இயலாது என தெரியவந்தது.
அதேவேளையில், திருப்பூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லினாக் எனப்படும் அதிநவீன புற்றுநோய் கதிா் வீச்சு சாதனமும், சிகிச்சை கட்டமைப்பும் வர உள்ளதால் அங்கு பெட் ஸ்கேன் வசதி ஏற்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக இயக்குநா் அரசுக்கு சில பரிந்துரைகளை முன்மொழிந்தாா். அரசுக்கு கூடுதல் நிதி சுமையின்றி தனியாா் பங்களிப்புடன் அந்த பெட் ஸ்கேன் கட்டமைப்பை அமைக்கவும், ஏற்கெனவே உள்ள மருத்துவக் கட்டடங்களுக்கு இடையூறு இன்றியும், கூடுதலாக பணியாளா் தேவை இன்றியும் அதனை செயல்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டது.
அதனை கவனமாக பரிசீலித்த அரசு, கிண்டி, திருப்பூா், திருச்சி, விழுப்புரத்தில் பெட் ஸ்கேன் மையங்களை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான கொள்முதல் நடவடிக்கைகளை வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.