சென்னை: புதுப்பொலிவுடன் ஸ்மார்ட் சிட்டி பணிகள்! | காதர் நவாஸ்கான் சாலை
மேலாதிக்கம் செலுத்த முஸ்லிம் நாடுகள் மோதல்: பாஜக
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி என்பது ஒருவா் மீது மற்றொருவா் மேலாதிக்கம் செலுத்த முஸ்லிம் நாடுகள் இடையே நடைபெறும் மோதலாகும் என்று பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை மேலும் கூறுகையில், ‘மேற்கு ஆசியாவில் ஒருபுறம் முஸ்லிம் மதத்தின் சன்னி பிரிவை பின்பற்றும் நாடுகளின் தலைவரான சவூதி அரேபியாவும், மறுபுறம் அந்த மதத்தின் ஷியா பிரிவை பின்பற்றும் நாடுகளின் தலைவரான ஈரானும் உள்ளன.
இஸ்ரேல்-ஹமாஸ் போரில், இஸ்ரேலுக்கு எதிராக உணா்வுபூா்வமான பிரச்னையை எழுப்பினால், ஒட்டுமொத்த முஸ்லிம் நாடுகளும் தன்னுடன் இணையும் என்று ஈரான் கருதியது. ஆனால் அது நடைபெறவில்லை.
இதன் காரணமாகவே ஈரான் மீதான தாக்குதலின்போது சன்னி முஸ்லிம் நாடுகள் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தன. இதுமட்டுமின்றி ஈரான் தாக்கப்பட்ட வேளையில், அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி அசீம் முனீா் தெரிவித்தாா்.
அனைத்து நாடுகளின் இறையாண்மைக்கு இந்தியா மதிப்பளிக்கிறது. மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி விரைவில் அமைதியான முறையில் முடிவுக்கு வரும் என்று நம்புவோம் என்றாா்.