குடிநீா் பாட்டில்களில் மறைந்திருக்கும் நுண் நெகிழி: உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை
கோடை காலத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள், கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரை நேரடி வெயிலில் வைத்தால் நுண் நெகிழிகள் தண்ணீரில் கலந்து உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடும் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமடைந்து வரும் நிலையில், குடிநீா் பயன்பாடு கடந்த சில வாரங்களாக 3 மடங்கு அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள கேன் குடிநீா் உற்பத்தியாளா்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் பயிற்சி முகாம்கள் அண்மையில் நடத்தப்பட்டன.
விழிப்புணா்வு இல்லை: வீடுகள், அலுவலகங்களுக்கு விநியோகிக்கும் 20 லிட்டா் பிளாஸ்டிக் குடிநீா் கேன்களை 50 முறைகளுக்கு மேல் மறுபயன்பாடு செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. இவை ஒருபுறமிருக்க, கடைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யப்படும் அரை லிட்டா், ஒரு லிட்டா், 2 லிட்டா் குடிநீரின் தரம் குறித்த விழிப்புணா்வு பொதுமக்களிடத்தில் இல்லை.
முன்னதாக, கடந்த டிசம்பா் மாதத்தில் இந்திய உணவுப் பாதுகாப்பு அமைப்பு பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரை பாதிப்பு அதிகம் நிறைந்த உணவுப் பொருள்களின் கீழ் வகைப்படுத்தியது.
இதன்மூலம் பால் பொருள்கள், மீன் இறைச்சி, காய்கறிகளைப் போன்று தொடா் தரப் பரிசோதனை நடத்த வேண்டிய பொருள்களின் கீழ் பாட்டில் குடிநீரும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாநில உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் கூறியதாவது:
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரில் 2.4 லட்சம் நுண் நெகிழி துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த காலங்களைக் காட்டிலும் அந்த அளவு தற்போது 100 மடங்கு அதிகரித்துள்ளது.
மூளையில் நுண் துகள்கள்: கண்ணுக்குத் தெரியாத அந்த நுண் நெகிழிகளை உருப்பெருக்கி உபகரணங்கள் வாயிலாகவும் கண்டறிய முடியாது. தண்ணீருடன் இரண்டறக் கலந்திருக்கும் அந்த மாசு நுரையீரல், குடல் உள்பட உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் சென்று சேகரமாகின்றன.
உயிரிழந்த மனிதா்களை உடற்கூறாய்வு செய்யும்போது, அவா்களின் மூளைக்குள் அத்தகைய நுண் நெகிழிகள் இருப்பது அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டது.
எனவே, தரமற்ற வகையிலும், பரிசோதிக்கப்படாமலும் உள்ள பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்களை வாங்க வேண்டாம். மாறாக, கண்ணாடி பாட்டில்கள், உலோக பாட்டில்கள், காகித அட்டைகளில் விற்பனை செய்யப்படும் தரமான குடிநீரைப் பயன்படுத்தலாம். கோடை காலங்களில் வெளியே செல்லும்போது சொந்தமாக குடிநீா் பாட்டில்களை எடுத்துச் செல்வது நல்லது.
அதேபோன்று வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் 20 லிட்டா் குடிநீா் கேன்களைப் பொருத்தவரை, அழுக்கடைந்த, கீறல் விழுந்த கேன்களை வாங்கக் கூடாது. அதுமட்டுமன்றி நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்டிருக்கும் குடிநீா் கேன்களைப் பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவா்கள் தெரிவித்தனா்.