பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: அதிகம் தேர்ச்சி பெற்ற முதல் 5 மாவட்டங்கள்!
மே 11-ல் ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளைப் பயன்படுத்த வேண்டாம்: அன்புமணி
மாமல்லபுரத்தில் வருகிற 11-ஆம் தேதி சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளைப் பயனபடுத்த வேண்டாம் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
முழு நிலவு மாநாட்டுக்குச் செல்லும் காா், வேன், பேருந்து உள்ளிட்ட எந்த வாகனங்களிலும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த அனுமதி கிடையாது.
கத்தி, உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களையும் வாகனங்களில் எடுத்துச் செல்லக் கூடாது. முழக்கங்களை எழுப்பியபடி செல்லக் கூடாது என்பன போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி தன்னுடைய எக்ஸ் தளத்தில் விடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
”இந்த மாநாட்டில் பல லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கவுள்ளனர். அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதி கிடைக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டின் நேரத்தில் அந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம். அதற்காக முன்னெச்சரிக்கை செய்தியைக் கூற கடமைப்பட்டுள்ளேன்.
மே 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளை பொதுமக்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் மன்னிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
பொது மக்களுக்கு டாக்டர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் வேண்டுகோள்.! pic.twitter.com/NrxSvikGVB
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) May 7, 2025
காவல் துறை நிபந்தனைகள்
இந்த மாநாட்டுக்குச் செல்லும் கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், திருச்சி உள்ளிட்ட மத்திய மாவட்டங்களில் இருந்தும், தென் மாவட்டங்களில் இருந்தும் செல்லும் வாகனங்கள் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக செல்லக் கூடாது.
குறிப்பாக, விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள்பட்ட சின்னக்கோட்டக்குப்பம் பகுதியிலிருந்து தாழங்காடு வரை (சுமாா் 39 கி.மீ. தொலைவு) கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக செல்ல காவல் துறை சாா்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த வாகனங்கள் திண்டிவனம், மேல்மருவத்தூா், மதுராந்தகம் வழியாகவும், மத்திய, தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூா், மதுராந்தகம் வழியாகவும் மாநாடு நடைபெறும் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்றும் காவல் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.