கொல்லப்பட்ட ஈரான் தளபதிகள், விஞ்ஞானிகளின் இறுதிச் சடங்கு! சாலைகளில் திரண்ட மக்கள்!
இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் முக்கிய தளபதிகள் மற்றும் அந்நாட்டின் விஞ்ஞானிகளின் இறுதிச் சடங்கு இன்று (ஜூன் 28) நடைபெறுவதால், லட்சக்கணக்கான மக்கள் தெஹ்ரானின் சாலைகளில் திரண்டுள்ளனர்.
"ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற பெயரில் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள், ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13 ஆம் தேதி தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதல்களில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தளபதி ஜெனரல். ஹொசைன் சலாமி மற்றும் ஏவுகணைகளின் தளபதி ஜெனரல். அமிர் அலி ஹாஜிஸாதேஹ் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையில் தொடங்கிய 12 நாள் போரானது நிறுத்தப்படுவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஜூன் 24 ஆம் தேதி அறிவித்தார்.

இருப்பினும், இந்தப் போரில் ஈரானின் 30 முக்கிய ராணுவ தளபதிகள் மற்றும் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் ஆகியோரை கொன்றதுடன், 8 அணுசக்தி தளவாடங்கள் மற்றும் 720-க்கும் மேற்பட்ட ராணுவ கட்டமைப்புகள் ஆகியவற்றை தாக்கி தகர்த்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
இந்நிலையில், கொல்லப்பட்ட ஈரானின் தளபதிகள், விஞ்ஞானிகள் மற்றும் 4 பெண்கள், 4 குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 60 பேருக்கான இறுதிச் சடங்குகள், அந்நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் இன்று (ஜூன் 28) நடைபெற்று வருகின்றன.
இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்க லட்சக்கணக்கான ஈரான் நாட்டு மக்கள் தெஹ்ரானின் சாலைகளில் திரண்டுள்ள நிலையில், போரில் கொல்லப்பட்ட அனைவரது உடல்களும் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டிகள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டுள்ளன.
முன்னதாக, ஈரானில் இதுபோன்ற முக்கிய தளபதிகள் மற்றும் தலைவர்களின் இறுதிச் சடங்குகள், அந்நாட்டின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி தலைமையில் நடைபெறுவது வழக்கம். ஆனால், இன்று நடைபெறும் இறுதிச் சடங்கில் அவரது வருகை குறித்து, இதுவரை எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
SUMMARY
Funeral of slain Iranian generals and scientists, People gather on the streets of Tehran.
இதையும் படிக்க: நடுவழியில் துர்நாற்றம், தொழில்நுட்பக் கோளாறு! சீன விமானம் அவசர தரையிறக்கம்!