ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்: முதல்வர் ஸ்டாலின்
``மும்பையில் இந்தி எதிர்ப்பு பேரணி'' - 20 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த தாக்கரே சகோதரர்கள்
மகாராஷ்டிராவில் கடந்த 2005-ம் ஆண்டு சிவசேனாவில் இருந்து ராஜ் தாக்கரே வெளியேறினார். சிவசேனா நிறுவன தலைவர் பால்தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட அதிகாரப்போட்டி காரணமாக கட்சியில் இருந்து வெளியேறிய ராஜ் தாக்கரே சொந்தமாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார்.
ஆரம்பத்தில் அவரது கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருந்தது. ஆனால் அச்செல்வாக்கு படிப்படியாக சரிந்து கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது.

ராஜ்தாக்கரே சிவசேனாவில் இருந்து விலகிய பிறகு சிவசேனாவுடன் எந்த வித உறவும் வைத்துக்கொள்ளவில்லை. எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் உத்தவ் தாக்கரேயும், ராஜ்தாக்கரேயும் சேர்ந்து கலந்து கொண்டதில்லை. உறவினர்களான இருவரும் இருவரது குடும்ப நிகழ்ச்சியில் கூட மிகவும் அபூர்வமாகவே கலந்து கொண்டனர்.
கடந்த 2022-ம் ஆண்டு திடீரென சிவசேனா இரண்டாக உடைந்தது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மை எல்.எல்.ஏ.க்களுடன் தனியாக சென்று சிவசேனாவை தன் வசப்படுத்திக்கொண்டார்.
இதனால் நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா படுதோல்வியை சந்தித்தது. ராஜ்தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும் இத்தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. இதனால் இரு சகோதரர்களும் ஒன்று சேர்வதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ராஜ்தாக்கரே தான் முதலில் அடித்தளம் அமைத்தார்.
மராத்தி பிரச்னைக்காக உத்தவ் தாக்கரேயுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக ராஜ் தாக்கரே தெரிவித்து இருந்தார். அதற்கு உத்தவ் தாக்கரேயும் சாதகமாக பதில் கொடுத்திருந்தார். இப்போது இந்தி திணிப்புக்கு எதிராக மீண்டும் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

மகாராஷ்டிரா பள்ளிகளில் ஒன்று முதல் 5-வது வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்திருந்தது. இதை எதிர்த்து ராஜ்தாக்கரே வரும் ஜூலை 5-ம் தேதி மும்பையில் மிகப்பெரிய பேரணி நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தார். இப்பேரணியை இப்போது சிவசேனா(உத்தவ்) மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து நடத்த சம்மதம் தெரிவித்துள்ளன.
இப்பேரணி கிர்காவில் இருந்து ஆசாத் மைதான் வரை நடக்கிறது. இதற்கும் ராஜ்தாக்கரேதான் முதல் அடியை எடுத்து வைத்தார். உத்தவ் தாக்கரே தனக்கு மிகவும் நெருக்கமான சஞ்சய் ராவுத்திற்கு நேற்று தொலைபேசியில் பேசினார்.
இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு கட்சிகளும் இணைந்து இப்பேரணியை நடத்துவது என்று முடிவு செய்துள்ளது.
அதனை தொடர்ந்து உத்தவ் தாக்கரே உறவினரும், எம்.எல்.ஏ-வுமான வருண் சர்தேசாய், ராஜ் தாக்கரே கட்சியின் மூத்த தலைவர் சந்தீப் தேஷ்பாண்டேயை பாந்திராவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது இரு கட்சிகளும் பேரணியில் கட்சி கொடியை பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. அதோடு மற்ற மராத்தி அமைப்புகளுக்கும் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. தாக்கரே சகோதரர்கள் பிரிந்த பிறகு 20 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக அரசியல் ரீதியாக ஒன்று சேருகின்றனர்.
இந்த கூட்டணி மாநகராட்சி தேர்தலிலும் நீடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மும்பை மாநகராட்சியை கைப்பற்ற பா.ஜ.க துடித்துக்கொண்டிருக்கிறது. எனவே பா.ஜ.கவிடமிருந்து மும்பை மாநகராட்சியை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கு ராஜ்தாக்கரேயின் தயவு உத்தவ் தாக்கரே-வுக்கு அவசியமாக இருக்கிறது.
உத்தவ் தாக்கரே இப்போது மகாவிகாஷ் அகாடி என்ற எதிர்க்கட்சி கூட்டணியில் இருக்கிறார். இக்கூட்டணியில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் இடம்பிடித்துள்ளது.