எல்லாவற்றையும் டிரம்ப் அறிவிக்கிறாரே.. இந்தியா அவுட்சோர்ஸிங் கொடுத்துவிட்டதா? ப....
Doctor Vikatan: நாவல் பழங்கள் சாப்பிட்டால் தொண்டை கட்டுவது ஏன்?
Doctor Vikatan: நாவல் பழம் சாப்பிட்டால் தொண்டை கட்டுவது ஏன்? ஜலதோஷம் பிடிக்குமா, நாவல்பழ கொட்டைகளை பொடியாக்கி, சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையும் என்பது உண்மையா? அதை எப்படி சரியான பக்குவத்தில் தயாரித்து எப்படி, எவ்வளவு உபயோகிக்க வேண்டும்?
பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்.
நாவல்பழம் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு ஏற்பட காரணம் அதன் துவர்ப்புச்சுவை. பாக்கு சாப்பிட்டால் எப்படி நாக்கு லேசாகத் தடிக்கிறதோ, அப்படித்தான் நாவல் பழம் சாப்பிடும்போது தொண்டையில் லேசான இறுக்கம் ஏற்படும். துவர்ப்புச் சுவையுள்ள உணவுகளின் தன்மைகளில் இதுவும் ஒன்று.
தினமும் 7 முதல் 8 எண்ணிக்கையில் நாவல் பழங்கள் சாப்பிடலாம். அதில் லேசாக உப்பும் மிளகுத்தூளும் தூவி சாப்பிட்டால், தொண்டை இறுக்கம் தவிர்க்கப்படும். நாவல் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் தொண்டைக்கட்டு, தற்காலிகமானது. சிறிது நேரத்தில் தானாகவே சரியாகிவிடும்.
தொண்டை கட்டும், ஜலதோஷம் பிடிக்கும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு பலரும் இந்தப் பழங்களைத் தவிர்க்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை.
இப்போது நாவல் பழ சீசன். அது முடிவதற்குள் முடிந்தவரை இந்தப் பழங்களைச் சாப்பிடுவது அவசியம். நாவல்பழத்தில் உள்ள ஆந்தோசயனின் என்ற நிறமி, புற்றுநோய்க்கு எதிராகப் போராடக்கூடியது.
சர்க்கரை நோயாளிகள் நாவல் பழம் மற்றும் அதன் கொட்டை என இரண்டையுமே எடுத்துக்கொள்ளலாம். நாவல் பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டைகளை வெயிலில் உலர்த்திப் பொடித்துக் கொள்ளவும். தினமும் காலையில் அதில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம். ரத்தச் சர்க்கரை அளவு குறையும். ஆனால், இதை மட்டுமே செய்துவிட்டு ரத்தச் சர்க்கரை அளவு குறையும் என எதிர்பார்க்கக்கூடாது. இதை கூடுதலாக ஒரு சப்ளிமென்ட்டாக எடுத்துக்கொள்ளலாம்.
சர்க்கரை நோய் இல்லாதவர்களும் நாவல் பழப் பொடியை வாரம் ஒரு முறை தேநீர் போலத் தயாரித்துக் குடிக்கலாம். இதிலுள்ள ஜம்போலின் என்ற வேதிப்பொருள், ரத்தச் சர்க்கரை அளவைக் குறைப்பதாக பல ஆய்வுகள் சொல்கின்றன. அது குறித்த தகவல்கள் சித்த மருத்துவத்திலும் சொல்லப்பட்டுள்ளன.
'நாவல் ஊற்று நீர்' பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நாவல் மரங்களுக்கு அடியில் ஏதேனும் ஊற்றோ, சிற்றாறோ இருந்தால், அதிலிருக்கும் தண்ணீரைக் குடித்தாலே இனிப்பும் துவர்ப்புமாக அவ்வளவு ருசியாக இருக்கும். அந்தக் காலத்தில் இதை சர்க்கரை நோய்க்கான பானமாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள். நாவல் பழத்தில் நிறைய வகைகள் உள்ளன. எது கிடைத்தாலும் சாப்பிடலாம். நாம் சாப்பிட மறந்த சுவைகளில் துவர்ப்புச் சுவை முக்கியமானது. அதை ஈடுகட்டும்வகையில் சீசனில் கிடைக்கும் நாவல் பழங்களை தவறவிடாமல் சாப்பிடுவது மிகச் சிறந்தது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.