Diwali Releases: `தீபாவளி டிரீட்' - இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வந்த...
சபரிமலை: தங்கம் மோசடி வழக்கில் உண்ணிகிருஷ்ணன் போற்றி நள்ளிரவில் கைது; 10 மணி நேரம் விசாரணை!
சபரிமலை தங்க கவசம்
சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் துவாரபாலகர் சிலை ஆகியவை செம்பு உலோகத்தால் அமைக்கப்பட்டிருந்த நிலையில், 1999-ம் ஆண்டு தொழிலதிபர் விஜய் மல்லையா தங்கம் பதிக்க சுமார் 30 கிலோ தங்கம் வழங்கியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு உண்ணிகிருஷ்ணன் போற்றி என்பவர் துவாரபாலகர்கள் சிலைக்கு தங்க கவசம் உபயமாக வழங்கியுள்ளார்.
ஐகோர்ட் கண்டனம்
இதற்கிடையே அந்தக் கவசங்களை பராமரிப்புப் பணி செய்து தருவதாகக்கூறி தேவசம் போர்டு அதிகாரிகள் முன்னிலையில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி சென்னைக்கு கொண்டுசென்றுள்ளார் உண்ணிகிருஷ்ணன் போற்றி.
ஐகோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்காமல் தங்க கவசங்கள் எடுத்துச் செல்லப்பட்டது சர்ச்சையானது. விலை மதிப்புமிக்க பொருள்களை கோயில் வளாகத்தில் வைத்துதான் பராமரிப்புப் பணிகள் செய்யவேண்டும் என்று ஏற்கெனவே கோர்ட் உத்தரவிட்டிருந்த நிலையில், கவசங்களை சென்னைக்கு கொண்டு சென்றது விதியை மீறும் செயல் என ஐகோர்ட் கண்டனம் தெரிவித்திருந்தது.

சிறப்பு விசாரணை குழு
இதையடுத்து சபரிமலை சன்னிதானத்துக்கு திரும்ப கொண்டுவரப்பட்ட தங்க கவசங்களில் சுமார் 4 கிலோ எடை குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சர்ச்சையானது.
அதுமட்டுமல்லாது விஜய் மல்லையா 1999-ம் ஆண்டு ஏற்கெனவே தங்கம் வழங்கிய நிலையில், மீண்டும் தங்கம் பதிக்க வேண்டிய அவசியம் என்ன? பழைய தங்கம் என்ன ஆனது என்ற கேள்வி எழுந்தது. இதுபற்றி விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது ஐகோர்ட்.
தங்கம் மோசடி
விசாரணையில் தங்க கவசம் மட்டுமல்லாது கருவறை வாசலில் தங்கம் பதிக்கப்பட்டதிலும் மோசடி நடந்ததாகத் தெரியவந்தது. 2019 ஆகஸ்ட் மாதம் ஐயப்பன் கோயில் கருவறை வாசலில் தங்கம் பதித்ததிலும் மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு மோசடிகளிலும் வெவ்வேறு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதால் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் உண்ணிகிருஷ்ணன் போற்றியின் பெயர் முதல் இடத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

மேலும், சபரிமலை முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு, முன்னாள் தேவசம்போர்டு செயலர் ஜெயஸ்ரீ, முன்னாள் திருவாபரண கமிஷனர்கள் பைஜூ, ராதாகிருஷ்ணன், முன்னாள் எக்ஸிகியூட்டிவ் ஆபீசர்கள் சுதிஷ்குமார், ராஜேந்திரபிரசாத், அசிஸ்டெண்ட் இன்ஜினியர் சுனில்குமார், முன்னாள் அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபீசர்கள் ஸ்ரீகுமார், ராஜேந்திரன் நாயர் ஆகியோர் மீது திருட்டு, கூட்டுச்சதி, நம்பிக்கை மோசடி, போலி ஆவணங்கள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன.
உண்ணிகிருஷ்ணன் போற்றி கைது
குற்றச்சாட்டில் 8வது இடத்தில் அன்றைய சபரிமலை நிர்வாகத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதுவரை நடைபெற்ற விசாரணையில் 474.9 கிராம் தங்கம் திருடப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உண்ணிகிருஷ்ணன் போற்றியை கிளிமானூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து நேற்று காலை சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
சுமார் 10 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு அவரை கைது செய்தனர்.
இன்று அவரை ரான்னி கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். மேலும், தொடர் விசாரணைக்காக அவரை சிறப்பு விசாரணைக்குழு போலீஸார் கஸ்டடியில் எடுத்து விசாரிப்பதற்காக மனு அளிக்க உள்ளனர்.