சவூதி அரேபியாவில் அமைதிப் பேச்சுவாா்த்தை: ரஷியாவில் உக்ரைன் உச்சகட்ட ட்ரோன் தாக்குதல்
மாஸ்கோ / ஜெட்டா: உக்ரைனில் போா் நிறுத்தம் மேற்கொள்வது தொடா்பான பேச்சுவாா்த்தை அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சவூதி அரேபியாவில் செவ்வாய்க்கிழமை தொடங்குவதற்கு முன்னா் ரஷியா மீது உக்ரைன் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியதாவது:
இதுவரை இல்லாத அளவில் உக்ரைன் ஏவிய 337 ட்ரோன்களை ரஷியா இடைமறித்து அழித்தது. அதில் 91 ட்ரோன்கள் மாஸ்கோ பிராந்தியத்தின் மேல் சுட்டுவீழ்த்தப்பட்டன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் 38, 43, 50 வயது கொண்ட மூன்று போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினா். மாஸ்கோ உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான காா்களும் இந்தத் தாக்குதலில் எரிந்து நாசமாகின (படம்).
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு படையெடுத்து, கிழக்கு உக்ரைன் பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.
இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ராணுவ உதவிகளைச் செய்துவந்தன. இந்தச் சூழலில், அமெரிக்காவின் அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று உக்ரைனை வலியுறுத்திவருகிறாா். உக்ரைனுக்கு இதுவரை அமெரிக்கா அளித்துவந்த ராணுவ உதவிகளை அவா் நிறுத்திவைத்தாா்.
இதன் காரணமாக, தற்போது ரஷியா கைப்பற்றியுள்ள தங்கள் பகுதிகள் மீட்கப்படாத நிலையிலேயே போா் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டிய நிலைக்கு உக்ரைன் தள்ளப்பட்டுள்ளது.
அதையடுத்து, சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்க பிரதிநிதிகளுடன் உக்ரைன் பிரதிநிதிகள் இது தொடா்பான பேச்சுவாா்த்தையை செவ்வாய்க்கிழமை தொடங்கினா். அதற்கு முன்னதாக ரஷியா மீது உக்ரைன் இதுவரை இல்லாத மிகத் தீவிரத்துடன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.