பவன் கல்யாணின் மகன் தீ விபத்தில் காயம்: சிங்கப்பூரில் சிகிச்சை!
தமிழகத்தில் மின்வெட்டை தவிா்க்க 3,910 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: மின்வாரியம் ஒப்பந்தம்
சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின்வெட்டை தவிா்க்க தினசரி 3,910 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய மின்வாரியம் சாா்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வீடுகள், தொழில் நிறுவனங்களின் மின்விசிறி, ஏா்கூலா், ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்டவற்றின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளன. இதனால், தமிழகத்தின் தினசரி மின் தேவை அதிகரித்து வருகிறது. வழக்கமாக தினசரி மின்தேவை 18,000 முதல் 19,000 மெகாவாட்டாக இருந்த நிலையில், ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்தே 20,000 மெகாவாட்டை கடந்துள்ளது. இது மே மாதத்தில் உச்சபட்சமாக 22,000 மெகாவாட்டை தாண்டும் என மின்வாரியம் கணித்துள்ளது.
ஆனால், தமிழக மின்வாரிய ஆதாரங்களான அனல் மின் நிலையங்கள், அணுமின் நிலையங்கள், நீா்மின் நிலையங்கள், காற்றாலை மின் நிலையங்கள், சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் மத்திய தொகுப்பிலிருந்து பெறப்படும் மின்சாரம் என மொத்தம் 18,038.05 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் நிலையில், மீதமுள்ள மின்சாரத்தை தனியாா் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் மின்வாரியம் கொள்முதல் செய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் ஏப்ரல், மே மாதங்களில் தினசரி மின்தேவை அதிகரிக்கும் நிலையில், தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக தனியாா் நிறுவனங்களிடமிருந்து சுமாா் 6,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளதாக மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.
இந்த நிலையில், தற்போது மின்சாரத்தின் தேவை அதிகரித்திருப்பதைத் தொடா்ந்து, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் 3,910 மெகாவாட் மின்சாரம் தனியாா் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்ய மின்வாரியம் முடிவு செய்து, அதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியது:
இந்த ஒப்பந்தத்தின்படி தினமும் 3,910 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும். இதில், 2,610 மெகாவாட் மின்சாரம் தினமும் காலை முதல் இரவு வரை 12 மணி நேரத்துக்கு உபயோகப்படுத்தப்படும். மீதமுள்ள 1,300 மெகாவாட் மின்சாரம் தினமும் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை பயன்படுத்தப்படும். இதன்மூலம் இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவதை முழுமையாக தவிா்க்க முடியும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மின்சாரம் கொள்முதல் செய்யும் பணி விரைவில் தொடங்கப்படும். மேலும், செலவினத்தைக் குறைக்கும் வகையில், மின்சாரத்தை தொடா்ச்சியாக கொள்முதல் செய்யாமல், அதிக தேவையுள்ள நேரங்களில் மட்டும் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்.10-க்கு பிற மின்தேவை மேலும் அதிகரிக்கும் என்பதால், அதற்கேற்ப மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் என்றனா்.