தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 6 எருமைகள் பலி!
திருப்பத்தூர்: திருப்பத்தூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 6 எருமைகள் ஏற்காடு விரைவு ரயில் சிக்கி பலியானது.
சென்னை ரயில் நிலையத்தில் இருந்து ஈரோடு வரை செல்லும் ஏற்காடு விரைவு ரயில் திங்கள்கிழமை நள்ளிரவு சென்னையில் இருந்து புறப்பட்டு ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது.
இதனிடையே, திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.28 மணியளவில் ஈரோடு நோக்கி புறப்பட்டது.
அப்போது, திருப்பத்தூர் ரயில் நிலையத்திற்கும் மொளகரம்பட்டி ரயில் நிலையத்திற்கு இடையே சு. பள்ளிப்பட்டு என்ற இடத்தில் 6 எருமை மாடுகள் ஒரே நேரத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி பலியானது.
இதனால், ரயிலில் எருமை மாடுகள் சிக்கியதால் ரயில் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து ரயில் ஓட்டுநர் உடனடியாக திருப்பத்தூர் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார் .
தகவல் அறிந்த திருப்பத்தூர் ரயில் நிலைய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ரயிலில் சிக்கிய 6 எருமை மாடுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் ரயில் சுமார் 2 மணி நேரம் தாமதமாக விடியற்காலை 4.55 மணியளவில் ஈரோடு நோக்கி புறப்பட்டது.
இதனால் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா வரை செல்லும் தன்பாத் விரைவு ரயில் மற்றும் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்லும் சபரி விரைவு ரயில் என 2 ரயில்கள் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் சுமார் அரை மணி நேரமாக நிறுத்தப்பட்டது.
அதன் பிறகு, ரயில்கள் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதையும் படிக்க: தங்கம் விலை 4-வது நாளாக குறைவு: எவ்வளவு தெரியுமா?