முதல்வர் தலைமையில் துணை வேந்தர்கள் கூட்டம் தொடங்கியது!
தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன அதிகார மசோதா, வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கக் கோரும் மசோதா உள்பட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி காலதாமதம் செய்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து அதற்கு எதிராகவும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலவரம்பை நிா்ணயம் செய்யக்கோரியும் தமிழக அரசு கடந்த 2023-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது. இந்த வழக்கில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய 10 மசோதாக்களையும் நிறுத்தி வைத்த ஆளுநரின் செயல் சட்டவிரோதமானது. இந்த மசோதாக்கள் மீது ஒரு மாதத்துக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கடந்த ஏப்.8-ஆம் தேதி தீா்ப்பளிக்கப்பட்டது.
இதன் மூலம் ஆளுநர் ஆர்.என்.ரவியால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் கிடைக்கப் பெற்றது.
தொடா்ச்சியாக அந்த 10 மசோதாக்களும் சட்டமாவதாக அரசிதழில் அறிவிப்பு வெளியானது. வருங்காலத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் முதல்வர் வசமாகியுள்ளதாக அரசிதழில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தின் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளா்களின் ஆலோசனைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் இன்று(ஏப். 16) நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: மலையேற்றம் மேற்கொள்வோர் கவனத்துக்கு... 23 வழித்தடங்கள் திறப்பு!