திருச்செந்தூர்: தரக்குறைவாகப் பேசிய பள்ளி ஆசிரியர்கள்; கடிதம் எழுதி வைத்து பழங்குடி மாணவர் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள பரமன்குறிச்சி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
இவரது மனைவி திருமணி. இவர்களது மகன், அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டின் கொல்லைப்புறத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைப் பார்த்த உறவினர்கள் மாணவனை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மாணவனைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.
மாணவனின் சட்டைப்பையில் ஒரு கடிதம் இருந்துள்ளது. அதில், “என் சாவுக்குக் காரணம் பள்ளி ஆசிரியைகள் வளர்மதி, பியூலா, மேரி மற்றும் தலைமை ஆசிரியை சத்யாதான்” என எழுதியிருந்தது.
இந்தக் கடிதத்தின் அடிப்படையில் திருச்செந்தூர் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். பள்ளி மாணவனுக்குச் சாதிச்சான்றிதழ் வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்ததாகவும், இதனால் மன உளைச்சலிலிருந்த மாணவனை ஆசிரியைகளும் அவதூறாகத் திட்டியதாகவும் தகவல்கள் பரவின.
இதனிடையே மாவட்ட கல்வி அலுவலர் கண்ணன் தலைமையிலான கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தினர்.
அதில், ஆசிரியர்கள் அம்மாணவரைத் தரக்குறைவாகப் பேசியது தெரிய வந்தது. இதனையடுத்து தலைமை ஆசிரியை உட்பட மாணவர் கடிதத்தில் குறிப்பிட்ட 4 ஆசிரியைகளையும் பள்ளியின் மேலாளர் பிரபாகர் பணியிடை நீக்கம் செய்தார்.
இந்த நிலையில், உயிரிழந்த மாணவரின் பெற்றோர்கள், உறவினர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தற்கொலைக்குக் காரணமான ஆசிரியைகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மாணவரின் உடலைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் ஒப்புக் கொண்டனர்.