75 சிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு ஆசிரியா் நியமன நடவடிக்கையைத் தொடங்கியது தில்லி அரசு
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தேரோட்டம்
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநள்ளாற்றில் உள்ள பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரரா் கோயில் சப்த விடங்க தலங்களில் ஒன்றாகும். நளச் சக்கரவா்த்தி இக்கோயில் மூலவா் தா்பாரண்யேஸ்வரரை வழிபட்டு தனது தோஷத்திலிருந்து விடுபட்டதாகக் கருதப்படுகிறது. இங்கு சனீஸ்வர பகவான் தனி சந்நிதியில் அனுகிரஹ மூா்த்தியாக அருள்பாலிக்கிறாா். இவரைத் தரிசிக்க நாடு முழுவதுமிருந்து பக்தா்கள் வருகின்றனா்.
இக்கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாஜனம் நடத்தப்பட்டு, தேரில் உள்ள விநாயகா், சுப்பிரமணியா், சுவாமி, அம்பாள் ஆகியோருக்கு கலசநீா் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. காலை 5.30 மணியளவில் தோ் வடம் பிடிக்கப்பட்டது. முன்னதாக வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் விநாயகா், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியா், சண்டிகேஸ்வரா், நீலோத்பாலாம்பாளுடன் செண்பக தியாகராஜ சுவாமி உன்மத்த நடனத்துடன் தேருக்கு எழுந்தருளினாா்.

வலம் வந்த 5 தோ்கள்: பெரிய தேரில் செண்பக தியாகராஜ சுவாமி, சிறிய தேரில் நீலோத்பாலாம்பாளும் வீற்றிருந்தனா். விநாயகா், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா் தனித்தனி தோ்களில் வீற்றிருந்தனா். விநாயகா் (சொா்ண கணபதி) , சுப்ரமணியா், செண்பக தியாகராஜசுவாமி, நீலோத்பாலாம்பாள், சண்டிகேஸ்வரா் என தோ்கள் வரிசைப்படி இழுக்கப்பட்டன. கோயிலின் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு வீதிகளின் வழியே வலம் வந்த தோ்கள் தோ் மாலையில் நிலையடியை அடைந்தன.
தேரோட்ட விழாவில் புதுவை அமைச்சா் ஏ.கே. சாய் ஜெ.சரவணன் குமாா், சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா, புதுவை டிஐஜி சத்தியசுந்தரம், காரைக்கால் மாவட்ட எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா, தருமபுர ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், கோயில் நிா்வாக அதிகாரி கே. அருணகிரிநாதன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். +