`அரசுப் பள்ளிக்கு என்ன குறைச்சல்?' - அரசுப் பள்ளியில் மகளைச் சேர்த்த மாவட்ட நீதி...
திருப்பத்தூர்: சுட்டிக் காட்டிய விகடன்; ஒரே நாளில் மின்கம்பிகள் உயரத்தில் மாற்றம்.. மக்கள் நிம்மதி!
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள மூக்கனூர் அல்ராஜ் வட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில், குடியிருப்பு பகுதிகளில் மின்கம்பிகள் தொட்டுவிடும் உயரத்தில் தொங்குவதால், மக்கள் நாள்தோறும் பயத்துடன் வாழ்ந்து வந்தனர்.
குறிப்பாக, மழைக்காலங்களில் காற்று வீசும்போது மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து தீப்பொறி கிளம்புவது வழக்கமாக இருந்தது. இதனால், கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுமோ என்ற அச்சம் நிலவியது.

இது குறித்து கிராம மக்களிடம் பேசியபோது, “கிட்டத்தட்ட ஒரு வருடமாக இந்த பிரச்னை தொடர்கிறது. பழைய மின்கம்பங்கள் சிமெண்ட் உதிர்ந்து விழும் நிலையில் உள்ளன. மின்கம்பிகள் கைக்கு எட்டும் உயரத்தில் இருப்பதால், நெல் மூட்டைகளைத் தலையில் சுமந்து செல்லும்போது மின்சாரம் தாக்குமோ என்ற பயம் உள்ளது. விவசாய இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாத நிலை ஒருபுறம் இருக்க, குழந்தைகள் கிரிக்கெட், கபடி போன்ற விளையாட்டுகளை விளையாட இந்தப் பகுதியில் சுற்றித் திரிவது மற்றொரு பயத்தை ஏற்படுத்துகிறது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்கிறோம்,” என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
இந்தப் பிரச்னை குறித்து மின்சாரத் துறைக்கு பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து மின்வாரிய அலுவலகத்துக்கு நேரில் சென்று மனு அளித்தும், அதிகாரிகள் அலட்சியமாகவே இருந்ததாக கூறினர். “எங்கள் உயிர்களுடன் விளையாடாமல், இந்த பிரச்னைக்கு அதிகாரிகள் விரைந்து தீர்வுகாண ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில்,இந்த விவகாரம் குறித்து விகடன் தளத்தில் ஸ்பாட் விசிட் செய்தி, மக்களிடம் பேசி திருப்பத்தூர்: கை தொடும் உயரத்தில் மின் கம்பி; பயத்தில் கிராம மக்கள்! - கண்டுகொள்வார்களா அதிகாரிகள்? என்ற தலைப்பில் அவர்களின் அவலநிலையை ஜூன் நான்காம் தேதி சுட்டிக்காட்டி இருந்தோம்.மேலும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு போயிருந்தோம்.
இதுகுறித்து (05/06/25) அன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களின் சிரமங்கள் மற்றும் விபத்து சூழலை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து, உடனடியாக நடவடிக்கை எடுத்து, முப்பது அடி உயரத்தில் புதிய மின்கம்பம் நட்டு மின்கம்பிகள் உயரத்தில் செல்ல ஏற்பாடு செய்துள்ளார்கள்.
இனி எந்த அசம்பாவிதமும் நிகழ வாய்ப்பில்லை என்று நிம்மதியடைந்த மூக்கனூர் கிராம மக்கள், தங்கள் பிரச்னையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து தீர்வு காண உதவிய விகடனுக்கு நன்றி தெரிவித்தனர்.