தென்காசி: மனைவி கண்முன்னே கணவன் வெட்டி கொலை; தலையை தனியே எடுத்துச் சென்றது ஏன்? பகீர் பின்னணி
தென்காசி அருகே மனைவி கண்முன்னே கணவன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவரின் தலையை தனியே எடுத்துச்சென்று வேறொரு பகுதியில் மர்மகும்பல் வீசிச்சென்றது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரத்தை சேர்ந்தவர் குத்தாலிங்கம் (வயது 35). தென்காசி அருகே உள்ள கீழப்புலியூரில் கார்மெண்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். தொழில் நிமித்தத்தின் காரணமாக திருமணம் முடிந்து கீழப்புலியூரில் தனியே குடும்பத்துடன் வசித்துவந்தார்.
இந்தநிலையில், தென்காசியில் பட்டப்பகலில் ரேஷன்கடை வாசலில் வைத்து மனைவி கண் முன்னே கணவன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து கொலை சம்பவம் குறித்த தகவல் தென்காசி போலீஸூக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், தலையில்லாத குத்தாலிங்கத்தின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொடூரமாக நடந்த கொலையில் குத்தாலிங்கத்தின் தலையை மட்டும் தூக்கிச்சென்ற கும்பல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில், குற்றாலத்தை அடுத்த காசிமேஜர்புரம் அம்மன் கோவில் அருகே குத்தாலிங்கத்தின் தலை கிடப்பதாக போலீஸூக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்குச்சென்ற போலீஸார், குத்தாலிங்கத்தின் தலையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதுடன், யார் கொலை செய்தார்கள்?, எதற்காக கொலை நடந்தது?, குத்தாலிங்கத்தின் தலையை மட்டும் வெட்டியெடுத்து கொண்டு வந்த கும்பல் 7 கி.மீ தொலைவில் உள்ள காசிமேஜர்புரத்தில் அதுவும் அம்மன் கோவில் அருகே ஏன் வைத்துச்சென்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போதுதான், பழிக்குப்பழியாக குத்தாலிங்கம் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

போலீஸ் விசாரணையில், கடந்த 2024 ஆண்டு நவம்பர் மாதம் காசிமேஜர்புரம் அம்மன்கோவில் பகுதியில் நடந்த திருமணத்திற்கு வாழ்த்து பேனர் வைப்பது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் அந்தப்பகுதியில் உள்ள தெருவைச் சேர்ந்த பட்டுராஜ் (வயது 27) என்பவரை வீட்டுக்கு வெளியே வரவழைத்து 4 பேர் கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.
இந்த கொலை சம்பவத்திற்கு பழிக்கு பழிவாங்கும் வகையில் குத்தாலிங்கம் கொலை செய்யப்பட்டதும், பட்டுராஜ் கொலை செய்யப்பட்ட அதேப்பகுதியில் குத்தாலிங்கத்தின் துண்டித்த தலையை வைத்து பழிக்குப்பழியை நேர்செய்துவிட்டு மர்மகும்பல் தப்பிசென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, குத்தாலிங்கம் கொலை செய்யப்பட்டது தொடர்பாக உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் தென்காசி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய மர்மகும்பலை பிடிக்கவும் போலீஸ் தரப்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது
இந்த கொலைச்சம்பவம் தென்காசி, கீழப்புலியூர், குற்றாலம், காசிமேஜர்புரம், பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
