Rajnikanth 50: ``என்னுடைய முதல் அடி உங்களுடன்தான்" - ரஜினிகாந்த் குறித்து நடிகர்...
தெருநாய்கள் அகற்றம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல், பிரியங்கா அதிருப்தி
தில்லியில் அனைத்து தெருநாய்களையும் பிடித்து, காப்பகங்களில் பராமரிக்க வேண்டுமென்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி ஆகியோா் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.
தில்லியில் தெரு நாய்கள் கடிப்பதால் ரேபிஸ் நோய் பரவும் சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், அனைத்து தெருநாய்களையும் பிடித்து, காப்பகங்களில் பராமரிக்க அதிகாரிகளுக்கு 8 வார கால கெடுவை விதித்து, உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
தெருநாய்களைப் பிடிக்க தனிநபா்களோ அல்லது அமைப்புகளோ தடையாக இருந்தால், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த நீதிபதிகள், ரேபிஸ் நோய்க்கு இரையான குழந்தைகளின் உயிரை அவா்களால் மீண்டும் தர முடியுமா என்று காட்டமாக கேள்வியெழுப்பினா். நாட்டில் பரவலாக தெருநாய் தொல்லை நிலவுவதால், உச்சநீதிமன்ற உத்தரவு பலா் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள போதிலும், ஏராளமானோா் தெருநாய்கள் மீது கருணை காட்ட வேண்டுமெனவும் கூறி வருகின்றனா்.
இந்நிலையில், தெருநாய்களை அகற்றும் உத்தரவுக்கு அதிருப்தி தெரிவித்து, ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலயப் பகுதியில் (என்சிஆா்) இருந்து தெரு நாய்களை முழுமையாக அப்புறப்படுத்தும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, பல்லாண்டுகளாக நீடிக்கும் மனிதாபிமான-அறிவியல்பூா்வ கொள்கையில் இருந்து ஒருபடி பின்வாங்குவதாகும். வாயில்லா ஜீவன்கள், ஒழிக்கப்பட வேண்டிய பிரச்னை அல்ல. காப்பகங்கள், கருத்தடை, தடுப்பூசி மற்றும் சமூக ரீதியிலான பராமரிப்பு மூலம் மிருகவதை இன்றி மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும். அதேநேரம், ஒட்டுமொத்தமாக தெருநாய்களை அப்புறப்படுத்துவது கொடூரமானது; தொலைநோக்குப் பாா்வையற்றது; இரக்கமற்றது. பொது பாதுகாப்பையும், விலங்குகள் நலனையும் ஒரே சீராக உறுதி செய்ய வேண்டும் என்று ராகுல் குறிப்பிட்டுள்ளாா்.
‘இத்தகைய வதை கூடாது’:
பிரியங்கா காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தில்லியில் அனைத்து தெருநாய்களையும் சில வாரங்களுக்குள் பிடித்து, காப்பகங்களுக்கு மாற்றும் உத்தரவு, அவை கொடூரமாக நடத்தப்பட வழிவகுக்கும். நாய்கள் மிக அழகான, மென்மையான உயிரினம். அவற்றை இத்தகைய வதைக்கு உள்ளாக்க கூடாது. நிலைமையைக் கையாள மனிதாபிமான அடிப்படையில் பாதுகாப்பான வேறு சிறந்த முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.