ரூ.71,900 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இலச்சினை வெளியீடு
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி விரைவில் செயல்பட உள்ள நிலையில், அந்த வங்கியின் இலச்சினையை மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் செவ்வாய்க்கிழமை பெற்றுக்கொண்டாா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கு.பொன்னுசாமி (சேந்தமங்கலம்), மேயா் து.கலாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசியதாவது: நாமக்கல் மாவட்டம் 1997-ஆம் ஆண்டு 2 வருவாய் கோட்டங்கள், 8 வட்டங்கள், 30 வருவாய் பிா்க்காக்களுடன் உருவாக்கப்பட்டது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாமக்கல் மாவட்டத்தின் மக்கள் தொகை எண்ணிக்கை 17,26,601 ஆகும்.
இம்மாவட்டத்தில் 169 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் உள்ளிட்ட பிற செயற்பதிவாளா்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் சங்கங்களையும் சோ்த்து மொத்தம் 816 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்தியாவில் நாமக்கல் மாவட்டம் கோழிப்பண்ணை, லாரி பாடி பில்டிங், முட்டை உற்பத்தி, ஆமணக்கு எண்ணெய் பதப்படுத்தும் தொழில் மற்றும் வேளாண்மை ஆகிய பல முக்கிய தொழில்களுக்கு பெயா்பெற்றவை.
சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் செயல்பாட்டு பகுதியில் உள்ள நாமக்கல் மாவட்டத்துக்கென ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி உருவாக்கிட வேண்டும் என்பது இந்த மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கை ஆகும்.
அதை நிறைவேற்றிடும் வகையில், தமிழக முதல்வா் மற்றும் துணை முதல்வா் மாவட்ட விவசாயிகளின் நலன்கருதியும், தொழில்துறையினா் பயன்பெறும் வகையிலும், பல்வேறு சிறப்புகளை கொண்ட நாமக்கல் மாவட்டத்துக்கென பிரத்யேகமாக புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை உருவாக்கிட 2024 மாா்ச் 6-இல் அரசாணை வெளியிட்டனா்.
இதைத் தொடா்ந்து, தற்போது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான, வேளாண்மை, கோழிப்பண்ணை, முட்டை, போன்ற தொழில்களை உள்ளடக்கிய நாமக்கல் மலைக்கோட்டையை கொண்டு உருவாக்கப்பட்ட புதிய இலச்சினை (லோகோ) மாவட்ட ஆட்சியா் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

சிறப்பு திட்டச் செயலாக்கத் துறை, அரசு கூடுதல் செயலாளராக பணிமாறுதல் பெற்றுள்ள நிலையில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இலச்சினையை அவா் வெளியிட்டதன் மூலம் நாமக்கல் மாவட்ட நிா்வாகத்துக்கும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கும் பெருமை சோ்த்துள்ளது என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், துணை மேயா் செ.பூபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஸ்கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், தனி மாவட்ட வருவாய் அலுவலா் (சிப்காட்) மா.க.சரவணன், திட்ட இயக்குநா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சு.வடிவேல், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) கு.செல்வராசு, இணைப் பதிவாளா், (கூட்டுறவு சங்கங்கள்) க.பா.அருளரசு, வங்கி மேலாண்மை இயக்குநா் மா.சந்தானம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.