என் படங்கள் திரைக்கு வருவதே போராட்டம்தான்: ராம்
இயக்குநர் ராம் தன் திரைப்பயணம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் சிவா, அஞ்சலி நடித்த பறந்து போ திரைப்படம் ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உணர்வுகளைப் பேசும் படமாக இது உருவாகியுள்ளது. டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளதால் வெளியீட்டிற்காகப் பலர் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் ராம், “நான் இயக்கும் படங்கள் திரைக்கு வரும்போதே சில பிரச்னைகளைச் சந்திக்கும். முதல் படத்திலிருந்தே அதைச் சந்தித்து வருகிறேன். ஏழுகடல் ஏழுமலை படம் நான் இயக்கிய படங்களில் பட்ஜெட் அதிகமானது. அதன் வணிகத்தை தயாரிப்பாளர் முடித்த பிறகே திரைக்கு வரும். திட்டமிட்டு இந்த துறையில் நான் இயங்குவதில்லை.
என்னிடம் வரும் தயாரிப்பாளர்கள் வித்தியாசமான படத்தைக் கொடுக்கவே விரும்புகின்றனர். அதனால், நான் சந்திக்கும் சிரமங்களைப் போல அவர்களும் வணிக ரீதியான சிக்கல்களைச் சந்திக்கின்றனர். கற்றது தமிழ், தங்க மீன்கள் படமெல்லாம் வெளியானதே பெரிய விஷயமாகப் பார்க்கப்பட்டது. பறந்துபோ படத்திற்கும் தங்க மீன்கள் படத்திற்கும் சில ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் உண்டு. ” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: போதைப்பொருள் விவகாரம்: நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள்!