நாமக்கல்: மாவட்ட ஆட்சியர் உமா சென்னைக்கு இடமாற்றம்... கண்ணீர் மல்க பிரியாவிடை அள...
Iran: ஈரானில் மாயமான 400 கிலோ யுரேனியம்.. ஆபத்தா? - அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வதென்ன?
ஜூன் 13, 2025 அன்று இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கும்,
ஜூன் 21, 2025 நள்ளிரவில் அமெரிக்கா ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கும் காரணம் ஒன்று தான்!
அது, 'ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நோக்கி நகர்கிறது. இது நடந்தால் உலகிற்கு ஆபத்து'.
ஆக, இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே குறி வைத்தது ஈரானின் அணுசக்தி திட்டப் பகுதிகளைத் தான். இஸ்ரேல் இன்னும் ஒரு படி மேலே போய் ஈரான் நாட்டின் அணு ஆராய்ச்சியாளர்களையும் கொன்றது.

ஒரு வாரத்திற்கு முன்பு ஆய்வு...
இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதலை தொடங்குவதற்கு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பு தான், சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஈரானின் அணுசக்தி நிலையங்களை பார்வையிட்டது.
அப்போது ஈரானில் 400 கிலோ கிராம் அளவிற்கு 60 சதவிகிதத்திற்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருந்துள்ளது. இதை 90 சதவிகிதம் அளவிற்கு செறிவூட்டினால் 10 அணு ஆயுதங்களைத் தயாரிக்க முடியும்.
ஆனால், இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியப் பின், ஈரான் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் சோதனையை அனுமதிக்கவில்லை.
அமெரிக்காவின் தாக்குதல்
அமெரிக்கா ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று ஈரானின் அணுசக்தி திட்டப் பகுதிகளைக் குறி வைத்து தாக்கியது.
ஆனால், இந்தத் தாக்குதலுக்கு பின், அங்கே இருந்த '400 கிலோ கிராம் யுரேனிம் எங்கு போனது?', 'என்ன ஆனது?' என்று சர்வதேச அணுசக்தி நிறுவனம் உள்ளிட்ட யாருக்கும் தெரியவில்லை. இதை அந்த நிறுவனத்தின் தலைவர் தலைவர் ரஃபேல் க்ரோஸியும் உறுதி செய்துள்ளார்.
அவற்றை ஈரானே மறைத்து வைத்திருக்கலாம் என்றும் க்ரோஸி கூறுகிறார்.

எழுந்துள்ள சந்தேகங்கள்...
400 கிலோ கிராம் யுரேனியம் காணாமல் போனதையொட்டி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்வைக்கும் இரண்டு காரணங்கள் இதோ...
ஒன்று, ஈரானின் இஸ்ஃபஹான் அருகில் உள்ள ரகசிய நிலத்தடிப் பகுதியில் இந்த யுரேனியத்தை ஈரான் மறைத்து வைத்திருக்கலாம். இதை இஸ்ரேலின் உளவுத்துறை கூறுகிறது.
இன்னொன்று, இந்த யுரேனியங்கள் தாக்குதலால் சிதிலமடைந்தப் பகுதிகளுக்கு கீழ் புதைந்து கிடக்கலாம். அதனால் தான், அதை இன்னும் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி வான்ஸின் கூற்று.
முதலாவதாக சொல்லப்பட்ட காரணம் உண்மையாகும் பட்சத்தில், ஈரான் மீண்டும் அதை எடுத்து பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
சந்தேகத்திற்கு வலுசேர்க்கும் ஆதாரம்
ஈரானின் அணுசக்தி திட்டப் பகுதிகளின் ஒன்றான ஃபோர்டோவின் வெளியே 16 லாரிகள் நின்றிருந்தது. இது அமெரிக்காவின் தாக்குதலுக்கு முன்பு எடுக்கப்பட்ட சாட்டிலைட் புகைப்படங்களில் தெளிவாகிறது.
ஆனால், தாக்குதலுக்கு பின்னான சாட்டிலைட் புகைப்படங்களில் இந்த லாரிகள் காணப்படவில்லை. அதனால், யுரேனியத்தை ஈரான் இந்த லாரிகள் மூலம் எங்காவது கொண்டு சென்று மறைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாகிறது.

வர உள்ள பிரச்னைகள்
ஜே.டி வான்ஸ் சொல்வதைப் போல, யுரேனியல் சிதிலமடைந்தவற்றிற்கு கீழ் இருந்தால், அது வெளிவரும் போது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
அப்படி இல்லாமல், ஈரான் அதை பத்திரமாக மறைத்து வைத்திருந்தால், அதை மீண்டும் அந்நாடு பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
400 கிலோ யுரேனியம் எங்கு போனது? அது புதைந்திருக்கிறதா அல்லது மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா? போன்ற உண்மைகள் வெளியே வரலாம்... வராமலும் போகலாம்.