`ஸ்பீக்கர் சத்தத்தை குறைக்க சொன்னதால் ஆத்திரம்..' - பெற்ற தாயை கொன்ற மகன்
உலகளாவிய ஏற்றத்தால் சென்செக்ஸ், நிஃப்டி 1% உயர்வுடன் முடிவு!
மும்பை: ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதட்டங்கள் தணிவதற்கான அறிகுறிகளுக்கு மத்தியில், உலக சந்தைகளில் ஏற்பட்ட எழுச்சியைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கிட்டத்தட்ட 1 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 760.8 புள்ளிகள் உயர்ந்து 82,815.91 ஆக இருந்தது. அதே வேளையில், பங்குச் சந்தையில் அதன் முந்தைய நாளின் ஏற்றத்தை நீட்டிக்கும் வகையில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் வர்த்தகத்தின் முடிவில் 700.40 புள்ளிகள் உயர்ந்து 82,755.51 புள்ளிகளாகவும், நிஃப்டி 200.40 புள்ளிகள் உயர்ந்து 25,244.75 ஆக நிலைபெற்றது.
அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து மூலதனத்தைத் திரும்பப் பெறுகையில், உலகளாவிய நேர்மறையான குறிப்புகளால் உள்நாட்டில் பங்குச் சந்தை அதன் வேகத்தைத் வெகுவாக தக்கவைத்தது.
சென்செக்ஸில் டைட்டன், மஹிந்திரா & மஹிந்திரா, இன்ஃபோசிஸ், பவர் கிரிட், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவை உயர்ந்தும் மறுபுறம் பாரத் எலக்ட்ரானிக்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை சரிந்து முடிந்தன.
நிஃப்டி-யில் டைட்டன் கம்பெனி, இன்ஃபோசிஸ், எம்&எம், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் ஆகியவை உயர்ந்து வர்த்தகமான நிலையில் பாரத் எலக்ட்ரானிக்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, ஐஷர் மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி, ஓஎன்ஜிசி ஆகியவை சரிந்து முடிவடைந்தன.
ஆட்டோ, நுகர்வோர் சாதனங்கள், ஐடி, தொலைத்தொடர்பு, சுகாதாரம், ஊடகம் ஆகிய அனைத்து துறை குறியீடுகளும் 1 முதல் 2 சதவிகிதம் உயர்ந்து முடிவடைந்தன.
ஓ.எஃப்.எஸ். வழியாக 15% பங்குகளை விற்க உரிமையாளர் முடிவு செய்ததையடுத்து டைமெக்ஸ் குரூப் இந்தியா பங்குகள் 5% சரிந்தன. பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் ஆர்டரை வென்றதால் பஜெல் ப்ராஜெக்ட்ஸ் பங்குகள் உயர்ந்து அதன் உச்சத்தை தொட்டது.
ஈஐடி பாரி, எம்சிஎக்ஸ் இந்தியா, ஹூண்டாய் மோட்டார், மேக்ஸ் ஃபைனான்சியல், ஹோம் ஃபர்ஸ்ட் ஃபைனான்ஸ், நாராயண ஹ்ருதயாலயா, பாரதி ஏர்டெல், ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, மேக்ஸ் ஃபைனான்சியல், எல்டி ஃபைனான்ஸ், ஆதித்யா பிர்லா கேபிடல், விஷால் மெகா மார்ட் உள்ளிட்ட 100 பங்குகள் இன்று பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தைத் பதிவு செய்தன.
ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயர்ந்து முடிந்தன.
ஐரோப்பிய சந்தைகள் இன்றைய மத்திய நேர வர்த்தகத்தில் கலவையான குறிப்பில் வர்த்தகமானது.
அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) கணிசமாக உயர்ந்து முடிந்தன.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.21 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு $67.95 ஆக உள்ளது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ.5,266.01 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். அதே வேளையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.5,209.60 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
இதையும் படிக்க: ஈரான்-இஸ்ரேல் போர் நிறுத்தம் எதிரொலி: தங்கம் விலை ரூ.900 சரிவு!