ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் பட்ஸ் இசட் 3! இந்தியாவில் அறிமுகம்!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய இயர்போனான, புல்லட் வயர்லெஸ் பட்ஸ் இசட் 3 இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
கழுத்தில் மாட்டிக்கொண்டு பாடல் கேட்கும் இயர்போன்களுக்கு இந்திய பயனர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அதனால், இதனையும் அவ்வாறே ஒன்பிளஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இளஞ்சிவப்பு மற்றும் கருப்பு ஆகிய இரு வண்ணங்களில் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,699 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான இணைய விற்பனை நிறுவன தளங்களிலும் இதனைப் பெற்றுக்கொள்ளலாம்.
சிறப்புகள் என்னென்ன?
சார்ஜிங் அம்சம் தான் இதன் மிக முக்கிய சிறப்பாக பார்க்கப்படுகிறது. அதாவது, 10 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும் என்றும், ஒருமுறை சார்ஜ் செய்தால், 36 மணி நேரத்துக்கு தொடர்ந்து பாடல்களைக் கேட்கலாம் என ஒன்பிளஸ் உறுதியளித்துள்ளது.
முப்பரிமாண ஒலி அலைகளை உருவாக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால், 360 கோணத்திலும் பாடல்கள் அல்லது இசையை பயனர்களால் உணர முடியும்.
நான்கு வகையிலான ஒலி அலைவரிசைகளை மாற்றிக்கொள்ளலாம்.
வெளிப்புற இரைச்சல்களை தடுத்து நிறுத்தி, பேசுவோரின் ஒலியை மட்டுமே வழங்கும் வகையில், மின்னணு இரைச்சல் ரத்து செய்யும் திறன் பொருத்தப்பட்டுள்ளது.
புளூடூத் 5.4 உடன் விரைவில் இணையும்.
இயர்போனில் பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், ஒலி அளவை கூட்டவோ, குறைக்கவோ, அழைப்புகளை ஏற்கவோ முடியும்.
இதையும் படிக்க | இரு நாள்களுக்கு பேட்டரி நீடிக்கும்! அறிமுகமானது போக்கோ எஃப் 7