ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் உணவுக்கூட கட்டுமானப் பணிக்கு அடிக்கல்
தண்டனை தராமல் திருத்தும் புதுமை ஆசான் நீங்கள்! - அப்பாவிற்கு மகளின் பரிசு #உறவின்கடிதம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
அன்புள்ள அப்பா...
ஆதிரையின் அழகான வணக்கங்கள்.
உங்க புருவம் உயர்த்துதலில் தெரிகிறது
உங்களின் வியப்பு.
எப்படி இருக்கீங்க ப்பா?!
உங்களுக்கு கடிதம் எழுத
நினைத்த உடனேயே
எழுந்து வந்து பேசுகின்றன
உங்களைப் பற்றிய நினைவுகள்.
ஒன்றா இரண்டா...
பெண் பிள்ளை பிறந்தால் கஷ்டம் ன்னு நினைக்கும் இந்த உலகத்தில் ஐந்து பெண்களைப் பெற்று அவர்களை இளவரசிகளைப் போல வளர்த்த உங்களைப்போல உலகத்தில் சிறந்தவர் யாருமில்லை.'
'the world's greatest dad'
'இல்லை 'என்ற சொல்லை இல்லாமலேயே ஆக்கிய உங்களிடம் இருந்துதான் ஒழுக்கமாக இருப்பது எப்படியென்பதை கற்றுக்கொண்டேன்.

என் செல்லம் நீங்கள்!
'தனக்கென ஒரு குறிக்கோளும் இல்லாத வாழ்வு பொருளற்றது என போதித்த
நீங்கள் தனித்துவமானவர்.
எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பிறகு நிதானமாக யோசித்து பேச... பிரச்சினைகளுக்கு விரைவில் ஒரு தீர்வு கிட்டும் ன்னு சொன்ன உளவியலாளர்.
ஒருமுறை முடிவு எடுக்க வேண்டிய விஷயத்தில் தடுமாறி நின்ற போது,
'ஒன்று வேண்டாம்ன்னு முடிவு எடுத்தபின் அதை பற்றி பேசுவதும், நினைப்பதும் தேவையற்ற சங்கடத்தை தரும் கண்ணம்மா'... ன்னு நீங்க கூறியதை... இப்பொழுது என் பிள்ளைகளுக்கு கூறுகிறேன்ப்பா.
காலையில் நடை பயிற்சி முடித்து வீட்டுக்கு வரும்போது எனக்கு மிகவும் பிடிக்கும்ன்னு கீரை வடையை சுடச்சுட வாங்கி வந்து என் கைகளில் சாப்பிடக்கொடுத்ததை மறக்க முடியுமா?அலுவல் விஷயமாக ஒவ்வொரு முறை வெளியூர் சென்று வரும் போதும் எனக்கு மிகவும் பிடித்த மிளகுத்தூள் போட்ட குட்டிக் குட்டி காராபூந்தியை (சேலம்பக்கத்தில் மிகவும் பிரசித்தம் இந்தக் காராபூந்தி) கைகளில் பாசமாகக் கொடுத்து சாப்பிடும் அழகை ரசிச்சீங்களேப்பா... இப்ப யாருக்காவது எனக்கு அந்த குட்டிக் குட்டி காராபூந்தி பிடிக்கும்னு தெரியுமாப்பா?
உங்களுக்கு சினிமா பிடிக்காது ...இருந்த போதிலும் நான் வருத்தப்படக்கூடாது, என் முகம் சற்றும் வாடி விடக்கூடாது என்றெண்ணி எனக்காக பிடிக்குதோ பிடிக்கலையோ சினிமாவிற்கு அழைத்துச் சென்ற நல்லதொரு தோழன் நீங்க. எத்தனையெத்தனை சினிமாக்களை நாம் இருவரும் விமர்சனம் செய்திருப்போம். தேங்காய் சீனிவாசன் போல் நீங்கள் மிமிக்ரி செய்ததை கண்கொட்டாமல் பார்த்து வியந்ததுண்டு.
நான் விரும்பிய படிப்பை படிக்க வைத்து என்னை அழகுப்படுத்திய நீங்க.. தண்டனை தராமல் திருத்தும் புதுமை ஆசான்.
யாருக்காகவும் இல்லை நாம் நமக்காகவே தான் நேர்மையாக இருக்கணும் வாழ்வில் மிச்சமிருக்கப் போவது நேர்மையும், அன்புமே... அன்று சொன்னது காதுகளில்இன்னமும் ரீங்காரமிடுகிறது .
வெகுமதிகள் பக்கம் சாயாத நேர்மை தராசு.
எனக்கு வயதாகும் போது தான் தெரிகிறது . எங்களை வளர்க்க எவ்வளவு சிரமப்பட்டு இருப்பீர்களென்று.. ஆனால் அது எதையும் எங்களிடம் ஒருபோதும் நீங்கள் காட்டிக் கொண்டதில்லை. எப்போது சிரித்த முகமாக.. கம்பீரமா.. வேற லெவல்ப்பா நீங்க!
அந்தந்த சூழலில் நம்மை பொருத்தி கொள்ள வேண்டும் இல்லாவிடில் நிம்மதி இருக்காது ன்னு .. நீங்க சொன்னது அப்ப புரியல இப்ப புரியுதுப் பா .. (அதனால்தான் இன்னமும் கூட்டுக் குடும்பத்தில் இருக்கிறேன்ப்பா)
'வாழ்வின் ஒவ்வொரு நொடியும் எதையோ கற்பித்துக் கொண்டுதான் இருக்கிறது. கற்பதில் தான் கவனமின்மை நிகழ்கிறது'. நீங்க அறிவுறுத்தியது நூற்றுக்கு நூறு உண்மை.
அப்பா...உங்க அன்பு ஒரு நட்பியல்.
இந்த உலகில் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்காத உறவுன்னா அது நீங்கதான் ப்பா!
நம்ம வளவனூர் வீட்டை திருமண மண்டபமாக கட்டணும்ன்றது உங்களுடைய கனவு ஆசை லட்சியம்.
ஆனால் நிறைவேறுவதற்குள் நீங்கள் இறைவனடி சேர்ந்து விட்டீர்கள் .
வளவனூர்ல ஒரு திருமண மண்டபம் கட்டி... 'பத்மா கண்ணன் திருமண மஹால்' சொந்தச் செலவில் (எளிமையாக) திருமணம் செய்ய தேவையான கூறைப்புடவை ,வேட்டி , தாலி, கட்டில் ,மெத்தை ,பீரோ ,மற்றும் அடிப்படைத் தேவையான மளிகைச் சாமான்கள் வாங்கிக் கொடுத்து வருடத்திற்கு இரண்டு திருமணங்களை (உங்க பிறந்தநாள் மற்றும் திருமண நாள்) இலவசமாக செய்யணும் .இது என்னுடைய லட்சியம்/விருப்பம்.
நீங்க நினைத்து நிறைவேறாத
உங்க ஆசையை
உங்க செல்ல மகள் ஆதிரை
நிச்சயம் ஒரு நாள் நிறைவேற்றுவாள்.
கண்டிப்பாக நான் வணங்கும் ஆஞ்சநேயரும் துணைபுரிவார்
மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல் என்றார் வள்ளுவர். (மகன் என்ற இடத்தில் மகள் என்று போட்டுக் கொள்ளுங்கள். )
நான் செய்கின்ற ஒவ்வொரு செயல்களிலும் உங்களை பெருமைப்படுத்திக் கொண்டே .
இவள் செந்தாமரைக் கண்ணனின் மகள் என்று ஊரார் பெருமையாக சொல்லும்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இனியும் அப்படியே வாழ்வேன்
நீங்கள் தான் என்னுள் இருந்து என்னை வழி நடத்துகிறீர்கள் . எனக்குத் தெரியும்.
லவ் யூ பா லவ் யூ சோ மச்.
நீங்களும், அம்மாவும் சந்தோஷமா எங்களைப் பத்தியெல்லாம் நினைக்காம, உங்க வாழ்க்கையை மகிழ்ச்சியா வாழுங்கப்பா!
இறந்து புதைந்த
சில அழகிய நிகழ்வுகள்
மீண்டும் உயிர் பெறுகிறது
உங்களுடன் கடிதம் வழி உரையாடுகையில்
அழகிய நினைவுகளாய்...
அன்பு முத்தங்கள் அப்பா
என்றென்றும் அன்புடன்
உங்கள் செல்ல மகள்
ஆதிரை வேணுகோபால் .
சென்னை 94
பி.கு(எங்க அப்பா எப்படி தெரியுமா என்று வியந்து பேசும் நேரங்களில் பெரும்பாலும் அப்பா உயிருடன் இருப்பதில்லை.) எங்கோ எதிலோ படித்தது...
