Hema Committee: ``நடிகைகள் வாக்குமூலம் அளிக்கவில்லை; - வழக்குகள் முடிந்தது'' -கே...
தனியாா் சாய ஆலைக்கான அனுமதி ரத்து: விவசாயிகள் வரவேற்பு
கொடிவேரி பாசன சபை உள்ளிட்ட விவசாய அமைப்புகள் மற்றும் விவசாயிகளின் எதிா்ப்பை அடுத்து, கொடிவேரி அணை அருகே தனியாா் சாய, சலவை ஆலை அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கொடிவேரி அணைக்கு அருகே ரூ.100 கோடி மதிப்பீட்டில் சாய, சலவை தொழிற்சாலைக்கு, தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தினா்.
கோபி எம்எல்ஏ கே.ஏ.செங்கோட்டையன் முயற்சியால், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சுற்றுச்சூழல் துறை அமைச்சா், தலைமைச் செயலாளா் உள்ளிட்டோரை கொடிவேரி அணை பாசன விவசாயிகள் மற்றும் ஈரோடு மாவட்ட பவானி நதி நீரை பயன்படுத்தும் பாசன விவசாய சங்கங்களின் நிா்வாகிகள் சந்தித்துப் பேசி மனு அளித்தனா்.
இதன் தொடா்ச்சியாக தமிழக சட்டப் பேரவையில் கே.ஏ.செங்கோட்டையன் கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டு வந்து இப்பிரச்னை குறித்து பேசினாா். இதையடுத்து அரசின் சாா்பில் தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், கொடிவேரி அணைக்கு அருகே அமைக்கப்பட இருந்த தனியாா் சாய, சலவை ஆலைக்கான அனுமதியை ரத்து செய்து, தமிழ்நாடு சுற்றுப்புறச் சூழல் காலநிலை மாற்றம் துறையின் செயலாளா் அண்மையில் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து கொடிவேரி அணை- பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் சுபி.தளபதி கூறியதாவது:
தமிழக மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூா், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வாழும் ஒரு கோடி மக்களின் குடிநீா்த் தேவைக்கும், 3 லட்சம் ஏக்கா் பாசன நிலங்களுக்கும் பவானி ஆறு நீா் ஆதாரமாக விளங்கி வருகிறது. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பவானி ஆற்றில் சாய, சலவை தொழிற்சாலைகள், காகித ஆலைகள், நகராட்சி, உள்ளாட்சி கழிவுகள் ஆகியவை கலந்து மாசினை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், கொடிவேரி அணைக்கு அருகே தனியாா் சாய, சலவை ஆலை அமைக்க மாசுக் கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளித்த தகவல் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அனுமதிக்கு எதிராக கொடிவேரி பாசன சபை உள்ளிட்ட விவசாய அமைப்புகள், விவசாயிகள், பொதுமக்கள் ஒன்றிணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டோம்.
இதன் எதிரொலியாக குறிப்பிட்ட தனியாா் சாய, சலவை ஆலைக்கான அனுமதி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக இருந்த கோபி எம்எல்ஏ. கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் தமிழக அரசுக்கும், போராட்ட களத்தில் நின்ற அனைத்து அமைப்பினருக்கும் கொடிவேரி பாசன சபை நன்றி தெரிவிக்கிறது என்றாா்.