எல்லாரும் உன்ன தப்பானவன்னு சொல்லி என்ன வளர்த்துட்டாங்கம்மா! - மகனின் மன்னிப்பு #உறவின்கடிதம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
"என்னை முதல் முத்தம்மிட்டவள்
இந்த உலகை எனக்கு அறிமுகம் செய்தவள். என்னுடைய 10 மாத சந்தோச அறைக்கு சொந்தக்காரி அவள். துளி என்றும் சொல்லமுடியாது அணு அளவும் எனக்கு தீங்கு நினைக்காதவள்.... இப்படியாக உனக்கு விளக்கம் கொடுத்தால் பேரகராதி கூட போதாது.
இந்த வாழ்கையில் நாம் அன்பிற்காக ஒருவருக்கு கடமை பட்டிருக்கிறோம் என்றால் அதில் முதலாவதாக அம்மாவை சேர்த்துக்கொள்ளலாம்.
அந்த கடமையை நாம் என்னசெய்தாலும் சமன் செய்ய இயலாது.
அதில் குறைந்தபட்சத்தையும் செய்ய தவறியவனாக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
அம்மா.... உனக்கும் அப்பாவுக்கும் என்ன பிரச்சனை என்று எனக்கு தெரியாது.. அப்பொழுது நான் 7 ஆம் வகுப்பு படிச்சுட்டு இருந்தேன். அன்று அப்பா, அண்ணா சொந்தக்காரங்க எல்லாரும் உன்ன அடிக்குறதுக்கு விரட்டுனது எனக்கு நல்லா நினைவிருக்கு. நீ ஓடி போய் ஒரு வீட்டுக்குள்ள ஒளிஞ்சுகிட்ட... அந்த வீட்டுக்காரங்க அப்பாவையும் அண்ணனும் வீட்டுக்குள்ள விடல... என்னை போய் உள்ள நீ இருக்கியானு பாக்க சொன்னாங்க... நீ உள்ள கதவுக்கு பின்னாடி மறைஞ்சு இருந்த.
ஆனால் அப்பாவும் அண்ணனும் உன்ன அடிப்பாங்கனு சொல்லி நீ வீட்டுக்குள்ள இல்லனு சொல்லிட்டேன்... அப்புறம் உன்ன திட்டிகிட்டே நம்ம வீட்ட காலி பண்ணிட்டு என்னைய கூப்பிட்டு வந்துட்டாங்க... வீட்டுல உன்னோட போட்டோ எல்லாம் எடுத்து போட்டு உடைச்சாங்க .

அப்பா வெளியூர்ல தங்கி வேலை பாக்குறதுக்காக போயிட்டாரு, அண்ணன் காலேஜ்க்கு போய் அங்க ஹாஸ்டல்ல இருந்துகிட்ட்டான்.... என்னைய மட்டும் நம்ம மாமா வீட்டுல தங்கி அந்த ஊர்லயே என்னைய படிக்க வெச்சாங்க. அப்போ எனக்குனு யாரும் இல்லாத மாதிரி இருந்துச்சு.
மாமா பசங்க என்னைய ஏன் எங்க வீட்டுல இருக்க உங்க வீட்டுக்கு போனு சொல்லுவாங்க... அப்போலாம் நான் ஏங்கி ஏங்கி அழுதுறுக்கேன்.
இந்த சமூகம் நீ தப்பானவள் என சித்தரித்தது. என் காதில் திணித்தது.
அதுக்கு அப்புறம் நீ தேனில பெரியம்மா வீட்டுல இருக்கிறதா சொன்னாங்க...
ஒரு 2 வருசத்துக்கு அப்புறம் வேற ஊரு இன்னொரு மாமா வீடு . அங்க தங்கி படிச்சேன்... எல்லாரும் உன்னைய தப்பா பேசினாங்க.. எனக்கு நீ ஏன் என்னைய தனியா விட்டுட்டு போனங்கிற கேள்விதான் இருந்துச்சு... அங்க அத்தை என்னோட டிரஸ்ஸ வாஷ் பண்ணும்பொதெல்ல்லாம் என்னை திட்டுவாங்க...
இப்டியே ஒரு 5 வருஷம் ஒடிருச்சு.
அந்த நேரத்துல உன்கிட்ட இருந்து கிடைக்குற அன்பு எல்லாம் எனக்கு கிடைக்காமா போச்சு. பல இரவுகள் தூங்காம இருந்துருக்கேன். எல்லாரும் நீ தப்பானவள்னு சொன்னாங்க... நீ அப்பாவுக்கு அண்ணனுக்கும் பயந்துதான் வரலனு எனக்கு தெரியும்.. ஆனாலும் நீ எங்க இருகக்கனு தெரிஞ்சும் நான் உன்கிட்ட வரல ... நீயும் என்னைய தேடி வரல... இதுக்கெல்லாம் காரணம் இந்த சமூகம் தான்.
அப்புறம் அப்பாவும் அண்ணனும் உன்னை கூப்பிட்டு வரசொல்லி என்னைய உன்கிட்ட அனுப்பி வெச்சாங்க... அவங்களுக்கு உன் மேல உள்ள பாசமா இல்ல இதுக்கு மேல ஒரு பெண் இல்லாம குடும்பத்தை சமாளிக்க முடியாதுனு தொனுச்சானு எனக்கு தெரியல.
ஆனால் எனக்கு உன்ன வந்து பாக்க விருப்பம் இல்ல... ஏன் தெரியுமா... எனக்கு விவரம் தெரியுற வயசுல நீ என்கூட இல்ல... நீ இல்லாததால நான் அந்த 5 வருஷம் ரொம்ப கஷ்டபட்டேன்.. இருந்தாலும் நான் உன்ன கூப்ட வந்தேன்.
உன்ன வந்து பாக்கும்போது எனக்கு என்ன பேசணும்னு எனக்கு ஒன்னும் புரியல.. வார்த்தையும் வரல... உன்ன வீட்டுக்கு வானு மட்டும் தான் கூப்பிட்டேன். நீயும் வந்த....
நீ வந்ததுக்கு அப்றமும் என்னால உன்கிட்ட சாதாரணமா பேசமுடியல... உன்ன கட்டி புடிச்சு அழனும்னு தோணுச்சு... ஆனால் என்ன பண்றது இந்த சமூகம் உன்ன கெட்டவள்னு என்னைய நம்ப வெச்சுறுச்சு . என்னை சுத்தி இருந்தவங்க அம்மா கிட்ட போகக்கூடாது , பேசக்கூடாது... உனக்கு அம்மா கெடையாதுனு சொல்லி கொடுத்தாங்களே... அது காரணமானு தெரியல. அதுக்கு அப்பறம் நான் காலேஜ்ல சேர்ந்து காலேஜும் முடிச்சுட்டேன். அப்போ தான் எனக்கு புரிந்தது இந்த சமூகம் தான் தப்புன்னு. இருந்தாலும் நான் நீ இல்லாம உன்கிட்ட பேசாம வளர்ந்துட்டேன்...
உன்னோட அன்பும் அரவணைப்பும் எனக்கு தேவபடாதுனு இந்த சமூகம் என்னைய நம்ப வெச்சுறுச்சு... அதோட பிம்பமா இப்ப வரை நம்ம குடும்பமா அப்பா அண்ணன் நீ நான் எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து இருந்து பேசி சிரச்சதுக்கூட கிடையாது. ஒருத்தருக்கு ஒருத்தர் முகம் பார்த்துகூட பேசமாட்டோம் .
நீ என்னைய கட்டிப்பிடிச்சு அணைச்ச நியாபகம் கூட எனக்கு சுத்தமா போயிருச்சு...
எனக்கு பல முறை தோனிருக்கு உன்ன கட்டி புடிச்சு அழனும்னு. ஆனால் அந்த சூழல் வரும்போதெல்லாம் இந்த சமூகம் என் தலைக்குள்ள உக்கார்ந்து தடுத்தது.
நான் உன்கிட்ட நிறைய கோவமா பேசிருக்கேன். உன்ன ரொம்ப கஷ்ட படுத்திருக்கேன். அப்படியே வருடங்கள் எல்லாம் ஒடிருச்சு இப்போ எனக்கு 25 வயசு ஆகிருச்சு. ஆனாலும் அந்த 7 ஆம் வகுப்பு படிக்கிறதுக்கு முன்னாடி இருந்த அம்மாவா என்னால உன்னைய பாக்க முடியல
திடீர்னு ஒரு நாள் நீ ஒரு விபத்துல இறந்தும் போய்ட்ட. நீ இந்த உலகத்த விட்டு போய்ட்ட.. அந்த செய்திய கேட்டதும் எனக்கு என்ன ஆச்சுன்னு வார்த்தையால் விவரிக்க முடியல. . நான் உன்னோட உறவு கொண்டாட தவறிட்டேன்... நான் உன்ன வந்து பாக்கும்பொது நீ ஆம்புலன்ஸ் ல முகம் எல்லா ரத்தத்தோட படுத்து கிடந்த .இப்போ நான் கூப்பிட்டாலும் நீ வரமாட்டனு எனக்கு தெரிஞ்சது...
வேகமா ஓடி வந்து உன்னை கட்டி பிடிச்சு கதறி கதறி அழுதேன்... இந்த சமூகம் உனக்கும் எனக்கும் கொடுத்த பரிசு அந்த இரக்கம் இல்லாத கடைசி Hug மட்டும் தான்... அம்மா நீ இருக்கும் போது இந்த சமூகமும் சுத்தி இருகுறவங்களும் சொல்றத கேட்டு நடந்து உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்...
இந்த சமுதாயம் சொல்லுகிற தப்பு சரி விளையாட்டுகளில் சிக்கி சிதைந்த மனிதர்களில் நாமும் சேர்ந்துவிட்டோம்.
நீ இல்லாமல் போன பிறகுதான் தான் எனக்கு, இழப்பு என்ற சொல்லுக்கு முழு பொருளையும் உணரமுடிந்தது.
ஆண் கட்டமைத்த சமூகம் பெண்ணை பல சூழ்நிலைகளில் ஒரு உணர்வற்ற பொம்மையாக இருக்கும்படி செய்கிறது..
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் நீ எனக்கு மகளாக பிறக்கும் வரம் கிடைத்தாலவது , நான் உனக்கு செய்த பாவங்களை திருதிக்கொள்வேன்.
மிஸ் யூ அம்மா.....
இப்படிக்கு ,
முரா
