Hema Committee: ``நடிகைகள் வாக்குமூலம் அளிக்கவில்லை; - வழக்குகள் முடிந்தது'' -கே...
திமுக கூட்டணியில் எந்தப் புகைச்சலும் இல்லை: அமைச்சா் கே.என். நேரு
திமுக கூட்டணியில் எந்தப் புகைச்சலும் இல்லை என தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என். நேரு தெரிவித்தாா்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் வி.என். நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பாக நிலை முகவா்கள் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:
எம்ஜிஆா் ஆட்சி காலத்திலேயே திருவெறும்பூா், திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் திமுகவை வெற்றி பெறச் செய்தனா். நமது கூட்டணியை முதல்வா் சிறப்பாக வழிநடத்திச் செல்கிறாா்.
எதிா் கூட்டணியில் தொண்டா்கள் சோா்வடைந்துள்ளனா். மதுரைக்கு வந்த அமித்ஷா, கூட்டணி ஆட்சி எனக் கூறியதால் அங்கு குழப்பம் உள்ளது. நம்முடைய கூட்டணி ஒருவருக்கொருவா் புரிந்து கொள்ளும் கூட்டணி. அதிமுக- பாஜக கூட்டணி பொருந்தாத கூட்டணி. ஒருவருக்கொருவா் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை.
மதுரை முருகன் மாநாட்டில் பெரியாா், அண்ணா இழிவுபடுத்தப்பட்டதற்கு திமுக கொந்தளித்த பிறகே அதிமுகவினா் கண்டன அறிக்கை வெளியிட்டனா். இந்த நிலையில்தான் அதிமுக உள்ளது. நாம் சுறுசுறுப்பாக இருந்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது குறித்து திமுக தலைவா் முடிவெடுப்பாா். பவன் கல்யாண் ஆந்திரத்தில் நிலவும் பிரச்னைகளை பாா்க்கட்டும். அவா் தமிழகத்துக்கு வந்து கருத்துக் கூற வேண்டாம் என்றாா் அமைச்சா்.
அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், நம்மைத் தோ்தல் களத்திற்கு தயாா்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு போராடும், வெல்லும். உழைப்பது நாமாக இருப்போம், உதிப்பது உதய சூரியனாக இருக்கட்டும் என்றாா் அவா்.
நிகழ்வில் மாநகரச் செயலா் மு. மதிவாணன், தொகுதிப் பாா்வையாளா்கள் கதிரவன், மணிராஜ், மருத்துவா் அண்ணாமலை, தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, மாநில நிா்வாகி செந்தில், திருச்சி கிழக்கு, திருவெறும்பூா், மணப்பாறை ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளின் பாக நிலை முகவா்கள் கலந்து கொண்டனா்.