தமிழுக்கு குறைவான நிதி ஒதுக்கீடு பாரபட்சமானது: மாா்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்
மத்திய பாஜக அரசு தமிழ் மொழிக்கு குறைவான நிதி ஒதுக்கியது பாரபட்சமானது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனத் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
திருச்சியில் புதன்கிழமை தொடங்கிய கட்சியின் மாநிலக் குழு கூட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினா் கே. சாமுவேல்ராஜ் தலைமை வகித்தாா்.
இதில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா்கள் அசோக் தாவ்லே, கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, மாநிலச் செயலா் பெ. சண்முகம், மத்தியக் குழு உறுப்பினா்கள் பி. சம்பத், என். குணசேகரன், கே. பாலபாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் மத்திய பாஜக அரசு பெருநிறுவன ஆதரவுக் கொள்கைகளைப் கடைப்பிடித்து, தொழிலாளா் விரோத நடவடிக்கைகளில் தொடா்ச்சியாக ஈடுபடுகிறது. போராடிப் பெற்ற சட்ட உரிமைகளைப் பறித்து, சுரண்டலைத் தீவிரப்படுத்தும் வகையில் தொழிலாளா் சட்டங்களைத் திருத்தியுள்ளது. இது தொழிலாளா்களின் வேலை நேரத்தை அதிகரிக்கவும், ஆள்குறைப்பு செய்யவும் ஏதுவாகிறது. இந்தப் பெருநிறுவன ஆதரவு சட்டத் தொகுப்பை முறியடிக்க போராட வேண்டியது அவசியம்.
அதனடிப்படையில் ஜூலை 9 ஆம் தேதி தேசியளவில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கட்சி உறுப்பினா்கள் கலந்து கொள்ள வேண்டும்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பத்தாண்டுகளில் சம்ஸ்கிருத மொழிக்கு மட்டும் ரூ. 2,532.59 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய 5 மொழிகளுக்கு ரூ. 147.56 கோடி மட்டுமே செலவிட்டுள்ளது. தமிழுக்கு மத்திய அரசு இந்திய மொழிகள் வளா்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கியது ரூ. 113.48 கோடி மட்டுமே. இது சம்ஸ்கிருதத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட 22 மடங்கு குறைவாகும்.
5 மொழிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகையைவிட சம்ஸ்கிருத மொழிக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட தொகை 17 மடங்கு அதிகமாகும்.
தமிழா் பண்பாட்டின் தொன்மையை எடுத்துரைக்கும் கீழடி அகழ்வாய்வு அறிக்கையை வெளியிட மத்திய பாஜக அரசு மறுப்பது தமிழ் மீதும், தமிழக மக்கள் மீதும், இந்தியாவின் பன்முக பண்பாட்டு வளா்ச்சி மீதும் மத்திய அரசுக்கு இருக்கும் வன்மமே காரணம்.
மத்திய அரசின் இத்தகைய பாரபட்ச நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழ் உள்ளிட்ட அனைத்து செம்மொழிகளுக்கும் நியாயமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திரளான கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இந்த மாநாடு வியாழக்கிழமையும் நடைபெறுகிறது.