திருவெறும்பூரில் நூலகம் திறப்பு
திருவெறும்பூா் பகவதிபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட நூலகத்தை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை திறந்து வைத்தாா்.
திருச்சி மாநகராட்சியின் 40 ஆவது வாா்டுக்குள்பட்ட திருவெறும்பூா் பகவதிபுரம் நடுநிலைப்பள்ளி அருகில் 2024-25 ஆம் ஆண்டு நிதியாண்டில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் ரூ. 62.52 லட்சத்தில் கட்டப்பட்ட நூலகத் திறப்பு விழாவில் மண்டலக் குழு தலைவா் மு. மதிவாணன், மாமன்ற உறுப்பினா் சிவகுமாா், மாநகராட்சி துணை ஆணையா் சரவணன், திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, திருவெறும்பூா் தொகுதி 16 ஆவது வாா்டு விஸ்வாஸ் நகரில் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 4.80 லட்சத்தில் மாமன்ற உறுப்பினா் மு. மதிவாணன் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட சின்டெக்ஸ் பைப்புடன் கூடிய தண்ணீா்த் தொட்டியை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்துவைத்தாா்.
நிகழ்வில் மாநகராட்சி உதவி ஆணையா் சரவணன், உதவி செயற்பொறியாளா் ஜெகஜீவராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.