கோவை விமான நிலையத்தில் 35 ட்ரோன்கள் பறிமுதல்: சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை
கோவை : சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட 35 ட்ரோன்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து பயணிகள் இரண்டு பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை பீளமேடு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, சீரடி, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும், சார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பயணிகளின் உடமைகள் மத்திய தொழில் பாதுகாப்பு துறை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வரும் விமானத்தில் ட்ரோன்கள் கடத்தப்படுவதாக திருச்சி சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு புதன்கிழமை இரவு விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் நவீன ஸ்கேன் இயந்திரத்தின் உதவியுடன் சோதனை செய்தனா்.
அப்போது, இரண்டு பயணிகளின் பைகளில் நவீன ரக 35 ட்ரோன்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு பயணிகளிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ட்ரோன்களின் மதிப்பு ரூ.35 லட்சம் எனக் கூறப்படுகிறது.
மேலும், அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அவர்கள் சங்கர் குரு சுப்ரமணியம் மற்றும் ஜாகீர் ஹூசியான் என்பதும் கடத்தி கொண்டுவரப்பட்ட ட்ரோன்கள், பேட்டரிகள் சீனா தயாரிப்பானது என்பது தெரியவந்தது.
விமானத்தில் உரிய ஆவணங்களின்றி ட்ரோன்கள், பேட்டரிகள் கொண்டுவரப்பட்டது எப்படி? என சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 21 ஆம் தேதி சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் திருச்சியை சேர்ந்த பயணி ஒருவரின் உடமையில் வைத்து கொண்டு வந்த 17 உயர் ரக செல்ஃபோன்களை சுங்கத்துறை அதிகாரிகள் பிடிக்காமல் கோட்டை விட்டனர். அதை விமான நிலையத்தின் வெளியே இருந்தா பீளமேடு காவல்துறையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் கண்டுபிடித்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ட்ரோன்களை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக செயல்பட்டு பிடித்தது குறிப்பிடத்தக்கது.