விறகு வாங்க வைத்திருந்த ரூபாயை எடுத்து என் அழுகையை அணைப்பாயே அம்மா! - மகனின் மன்னிப்பு #உறவின்கடிதம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
அன்புள்ள அம்மாவுக்கு,
அம்மா நான் பிறந்த போது தலைகோதி முதல் முத்தம் பதித்து உலகை அறிமுகம் செய்தாய். என்னை வளர்க்கும் போது ஆடி ஓடி திரிந்த என்னை இடுப்பில் தூக்கிவைத்து இறக்காமல் இறக்கை கொண்டு என்னை பற்றிய கனவில் நாளும் மிதந்து கொண்டிருந்தாய். திருவிழா வந்தது என்றால் விளையாட்டு பொருள் கேட்டு அடம்பிடிக்கும் எனக்கு விறகு வாங்க வைத்திருந்த ரூபாயை எடுத்து என் அழுகையை அணைப்பாய்.
தெருவில் முதல் முறை நடை பழகும் என்னைக் காட்டி என் மகன் எப்டி நடக்குறான் பாருங்க என்று எல்லோருக்கும் வேடிக்கை காமித்தாய். பிறந்த நாள் வந்தால் கூடவே நீ வாங்கி கொடுக்கும் சட்டையும் வந்துவிடும், உனது முதல் வாழ்த்தும் வந்துவிடும் என்பது எனக்கு எப்போது கேட்டாலும் சொல்லுவேன் உறுதியாய்.

பள்ளிக்குச் செல்ல டிப்பன் மூடியை மூட முடியாத அளவுக்கு உணவும், மூடி மேலே பத்து ரூபாயும் வைத்து தருவாய். என் முகம் கொஞ்சம் மாறினால் போதும் அன்றைய நாள் உனக்கு உண்ணாவிரதம் என்பாயே. பேனா எடுத்து எழுத சொன்னால் நான் என் குடும்பத்தை காதலிக்குறேன் என்று எழுதி வைப்பாயே.
உனக்காக உயிரையும் கொடுப்பேன் என்றெல்லாம் சொன்னாயே அம்மா. நானோ இந்த நாள் வரை ஏன் இத்தனை வயதாகியும் ஒரு நாளாவது உன்னை பற்றி யோசித்திருப்பேனா? உன் ஆசைகள் என்ன என்று கேட்டுருப்பேனா? உனக்கு ஒரு சேலை வாங்கி கொடுத்திருப்பேனா? அன்பாக நாலு வார்த்தை பேசிருப்பேனா?
என்னை பெற்றதற்காக நான் எதுவுமே உனக்கு செய்ததில்லையே அம்மா.
இன்று உனக்காக செய்ய எனக்கு ஒன்றே ஒன்று தான் மா இருக்கு. உனக்கு கொள்ளி மட்டும் நான் வெச்சு,என்னோட மொத்த பாவத்தை எரிச்சுடுறேன் அம்மா.
இப்படிக்கு
உன் கடைசி மகன் தர்மராஜ்
