சுபான்ஷு சுக்லாவுக்கு மோடி, ராகுல் வாழ்த்து!
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தேர்வான வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ் புதன்கிழமை விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஃபால்கான் 9’ மூலம் இன்று பகல் 12.01 மணிக்கு சுபான்ஷு சுக்லாவுடன் 3 பேர் விண்வெளிக்குப் புறப்பட்டனர்.
இந்த நிலையில், சுபான்ஷு சுக்லாவுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில்,
”இந்தியா, ஹங்கேரி, போலந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களின் பயணத்தை நாங்கள் வரவேற்கிறோம்.
இந்திய விண்வெளி வீரர், குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற உள்ளார். அவர் 140 கோடி இந்தியர்களின் விருப்பங்கள், நம்பிக்கைகளை தன்னுடன் சுமந்து செல்கிறார்.
அவருக்கும் மற்ற விண்வெளி வீரர்களுக்கும் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில்,
"குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான தனது பயணத்தைத் தொடங்கியது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான தருணம்.
முதல் இந்திய விண்வெளி வீரரான ராகேஷ் சர்மாவின் மரபை முன்னெடுத்து, 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்வது ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கமளிக்கிறார்.
சுபான்ஷு மற்றும் குழுவினர் பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் திரும்ப வாழ்த்துகிறேன். ஜெய் ஹிந்த், ஜெய் பாரத்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.