ஒருநாள் முழுக்க நீயும் நானும் மட்டும் நிறைய பேசனும் அப்பா! - மகனின் அன்பு வேண்டு...
House Uplifting: பூமிக்கு மேலே ஒரு அடி உயரும் அடையாறு `மத்திய கைலாஷ் கோயில்'
சென்னை அடையாறு, சர்தார்பட்டேல் ரோடு மற்றும் ராஜீவ் காந்தி சாலை சந்திப்பில் உள்ள நகரத்தின் மிக முக்கிய அடையாளமாக அமைந்துள்ளது மத்திய கைலாஷ் கோயில். சுமார் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலின் தொன்மை மற்றும் கோவிலை சுற்றி நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்துதல், மேம்பால கட்டுமானப்பணி போன்ற உள்கட்டமைப்பு விரிவாக்கங்களால் கோவில் வளாகம் சற்று சேதமடைந்ததாக கருதப்படுகிறது.
மேலும் கோயிலின் அடித்தளம் சாலையிலிருந்து சுமார் ஐந்து அடி கீழே உள்ளதால் சிறு மழை பெய்தாலும் கோவிலில் தண்ணீர் பெருமளவில் தேங்குகிறது. அவ்வவ்போது கோவிலை சுற்றி உள்ள சாலைகளில் இருந்து சாக்கடை நீர் கசிந்து கோவில் வளாகம் அசுத்தமடைகிறது. இது தவிர பெருச்சாளிகள் கோயிலின் கருங்கல் பதித்த தரையின் கீழ் உள்ள மண்ணைத் தோண்டி வடிகால் குழாய்களின் அடைப்பை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண கோவிலின் அடிமட்டத்தை உயர்த்தும் பொருட்டு திட்டமிட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகள் குறித்து கோவில் நிர்வாகி சிவகுமார் அவர்களிடம் பேசினோம். மழைநீர், சாக்கடை நீர் மற்றும் சாலையிலிருந்து கீழிறங்கி வரும்படி உள்ள நுழைவுவாயில் போன்ற பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு கோயில் வளாகத்தின் கட்டமைப்பு சீர் செய்து கோவில் உறுதியுடன் இருக்க நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் கோவிலை சாலைக்கு மேல் சுமார் ஒரு அடி உயரம் உயர்த்துவதற்கு வல்லுனர்களால் அறிவுறுத்தப்பட்டு சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் சன்னதிகளின் தரைமட்டத்தை உயர்த்தி கோவிலின் தரையை சமன் செய்து பக்தர்களுக்கு வசதியை ஏற்படுத்தும் பொருட்டு இந்த பணியை தொடங்கி உள்ளதாக கூறினார்.
கோவில் நிர்வாகக் குழு உறுப்பினர் சந்திரமௌலி கூறும்போது, பல்வேறு சிரமங்களுக்கு இடையே இந்த பணியை தொடங்கி உள்ளோம் தற்போதைய நிலையிலிருந்து சுமார் ஏழு அடி வரை உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். மேலும், தற்போது சாலை விரிவாக்கம், மேம்பால பணிகள் இந்த பகுதியில் நடைபெற்று வருவதால் கோவில் பணிக்கு அனுமதி கிடைப்பதிலும் எளிதாக உள்ளதாக கூறினார்.
இந்த கோவிலின் தரைமட்டத்தை உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தக்காரர் சுரேந்தர் குமார் அவர்களிடம் பேசினோம். அரியானவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் தமிழகத்தில் மட்டும் சுமார் 15 கோவில்களுக்கு மேல் இதுபோன்று தரைமட்டத்திலிருந்து உயர்திக்கொடுத்துள்ளதாக கூறும் இவர், கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டுள்ள இந்த பணிகள் செப்டம்பர் மாதம் முடிவிற்கு வரும் என்று எதிர்ப்பார்ப்பதாக கூறினார்.









இந்த பணிகள் மற்றும் கோவிலின் உறுதித்தன்மை குறித்து கேட்டபோது, கோயில் பக்கிங்ஹாம் கால்வாய்க்கு அருகில் இருப்பதால், சுமை உறுதி நீர்க்கசிவு போன்ற சோதனைகள் செய்து கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மூன்று வரிசை ஜாக்குகளைப் பயன்படுத்தி பணிகள் மேற்கொள்வதால் ஒவ்வொரு அடி உயர்தலுக்கும் பலமான அடித்தளம் அமைத்து குறிப்பிட்ட ஏழு அடி உயர்த்தி கோவிலை நிறுவும்போது குறைந்தபட்சம் அடுத்த நூறு ஆண்டுகளுக்கு உறுதித்தன்மையை கண்டிப்பாக உறுதி கொடுக்க முடியும் என்கிறார்.
இதேபோன்று சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த வியாசர்பாடி ரவீஸ்வரர் உள்ளிட்ட ஐந்து கோவில்களில் இதுபோன்று கோவிலை உயர்த்தும் பணியை மேற்கொண்டு வருவதாக கூறினார்.
இதுபோன்று பணிகள் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும் நாடி வரும் பக்தர்களுக்கு ஏமாற்றம் அளிக்காமல் உற்சவரை வணங்கி செல்லும் வகையில் இயங்கி வரும் இந்த கோவில் வரும் ஜனவரி மாதம் முழு தரிசனத்திற்கு வரும் என்கிறார்கள் கோயில் நிர்வாகிகள் .
கீழே இறங்கி தரிசனம் செய்த மத்திய கைலாஷ் கோவிலில் இனி ஒரு படி ஏறி வணங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை