Emobot: செல்ஃபி மூலம் மன அழுத்தத்தைக் கண்டறியலாம்? எப்படி தெரியுமா?
கேமராவின் முன் பக்கம் மூலம் மன ஆரோக்கியத்தை பகுப்பாய்வு செய்ய ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாகி வருகிறது.
நூற்றுக்கணக்கான நோயாளிகளின் மனநிலையைக் கண்காணிக்கவும், அவர்களின் மனச்சோர்வு சிகிச்சையின் செயல்திறனை மதிப்பிடவும் Emobot என்ற செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நாள் முழுவதும் முகபாவனைகளை பதிவு செய்து, அறிக்கையை வெளியிடுகிறது Emobot செயலி. இதனை நோயாளிகளின் நிலை அறிய மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து Emobot செயலியின் இணை நிறுவனர் சாமுவேல் லெர்மன் கூறுகையில் ”எமோபாட் செயலி பிரான்சில் ஒரு மருத்துவ சாதனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு செயலியை பரிந்துரைக்க மனநல மருத்துவர்களுடன் இணைந்து செயல்படுகிறது.
நோயாளிகளின் பதில்களைக் கண்காணிக்கவும், அவர்களின் மனநிலை திடீரென மோசமடைவதைக் கண்டறியவும் மற்றும் மீண்டும் நோய் ஏற்படும் அபாயத்தைக் கண்டறியவும் இந்த செயலி மருத்துவர்களுக்கு உதவியாக இருக்கிறது.
இந்த செயலி நோயாளிகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாலும், எதிர்கால பதிப்புகளை தொலைபேசி மைக்ரோஃபோன் வழியாக கேட்க வாய்ப்பு இருப்பதாலும் மக்கள் இதை எப்படி எதிர்கொள்வார்கள் என்ற பயம் ஆரம்பத்தில் இருந்தது.
கேமரா பின்னணியில் செயல்பட்டுக் கொண்டே இருந்தாலும், கேமராவிலிருந்து எந்த புகைப்படங்களும் மைய தரவுத்தளத்திற்கு அனுப்பப்படுவதில்லை அல்லது சேமிக்கப்படுவதில்லை. ஏனெனில் அவை பயனரின் தொலைபேசியில் AI ஆல் செயலாக்கப்பட்டு நீக்கப்படும்" என்று கூறியிருக்கிறார்.
50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 14,000-க்கும் மேற்பட்ட தொடக்க நிறுவனங்கள் கூடியிருந்த VivaTech 2025 நிகழ்வில் ஆரோக்கியத்தை மேம்படுத்த AI மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக சாமுவேல் லெர்மன் தெரிவித்துள்ளார்.