திருச்செந்தூர் கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு என்பது அவமானம்: சீமான்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என்று கூறுவது அவமானம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு தமிழிலும் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருந்த நிலையில் இது குறித்து சீமான் அறிக்கை விடுத்துள்ளார்.
சீமான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ் இறையோன் திருச்செந்தூர் திருமுருகப்பெருமானுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியும் - தெய்வத்தமிழ் பேரவையும் இணைந்து திருச்செந்தூரில் முன்னெடுத்த அறப்போராட்ட பொதுக்கூட்டத்தினால் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியின் விளைவாக , தற்போது திருச்செந்தூர் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக தமிழ்த்திருமுறைகள் முற்றோதல் நடைபெறும் என்றும், அதுதான் தமிழ் குடமுழுக்கு என்றும் ஏமாற்றும் வெற்று அறிவிப்பினை திமுக அரசு வெளியிட்டிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 'தமிழிலும்' குடமுழுக்கு நடத்தப்படும் என்று கூறுவது வெட்கக்கேடானது. குடமுழுக்கு முழுமையாக தமிழில் நடத்தப்பட வேண்டும். தாய்த்தமிழில் குடமுழுக்கு என்பது திமுக அரசு வேண்டா வெறுப்பாக இடும் பிச்சையோ, சலுகையோ அல்ல; திருச்செந்தூர் ஒன்றும் ஆந்திரத்திலோ, கர்நாடாகத்திலோ, கேரளத்திலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ இல்லை. நாங்கள் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலிலோ, சபரிமலை ஐயப்பன் கோயிலிலோ, மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலிலோ தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்று கேட்கவில்லை.
தமிழ்நாட்டில், தமிழ் முன்னோர்கள் கட்டிய தமிழர் இறையோன் திருச்செந்தூர் திருமுருகப்பெருமான் திருக்கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பது மானத்தமிழினத்தின் வழிபாட்டு உரிமை. அதனை வழங்குவதில் அமைச்சருக்கு ஏன் இத்தனை சலிப்பு? இத்தனை வெறுப்பு? திமுக அரசு யாரும் கேட்காமல் முழுமையாக தமிழில் குடமுழுக்கு நடத்தும் என்றால் அதனை அறிவிப்பதில் இன்னும் ஏன் தாமதம்? நாங்கள் போராட்டம் நடத்தும்வரை அமைச்சர் சேகர்பாபு வாய் திறவாதாதது ஏன்? திருச்செந்தூர் திருமுருகப்பெருமான் கோபுர கலசங்கள் நன்னீராட்டப்படும் போதும், வேள்விச்சாலையிலும் தமிழ் மந்திரங்கள் ஓதி தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழ் அறிஞர்கள், மெய்யன்பர்கள் மற்றும் தமிழ் மக்களின் கோரிக்கையும், விருப்பமுமாகும்.
குறைந்தபட்சம் சமஸ்கிருத்திற்கு இணையாக சரிபாதி வேள்விச்சாலைகள் அன்னைத்தமிழுக்கு வழங்கப்பட வேண்டும். கோபுர கலசங்கள் நன்னீராட்டின்போது கோபுர உச்சியிலும் தமிழ் மந்திரங்கள் ஒலிக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாகும். அதனை விடுத்து, தமிழ் ஓதுவார்களை ஓரமாக நிற்க வைத்து முற்றோதல் செய்துவிட்டு, அதனை தமிழில் குடமுழுக்கு நடத்தியதாக ஏமாற்றும் திமுக அரசின் வழக்கமான ஏமாற்று அறிவிப்பை ஒருபோதும் ஏற்க முடியாது. தமிழ்நாடு அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து கோயில்களிலும் அன்னைத்தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பது உயர்நீதிமன்றமே தம்முடைய தீர்ப்பின் மூலம் உறுதி செய்துவிட்டது. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் திமுக அரசிற்கு ஏன் இத்தனை தயக்கம்? ஏன் இத்தனை நடுக்கம்? என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: திருச்செந்தூரில் தமிழிலும் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு தகவல்