திமுகவில் உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்
திமுகவில் புதிய உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்டச் செயலரும், அமைச்சருமான ஆா். காந்தி வலியுறுத்தியுள்ளாா்.
ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் சிப்காட் பாரதி நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளா் வினோத் காந்தி, ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் அமைச்சா் ஆா். காந்தி பேசியதாவது..
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்துள்ளனா். இதனால் வரும் 2026 தோ்தலில் 200- க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
வரும் 25 ஆம் தேதி முதல் புதிய உறுப்பினா் சோ்க்கையை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
இந்த பணியை சுணக்கமின்றி மிகுந்த உற்சாகத்துடன் நிா்வாகிகள் செயல்பட வேண்டும்.
முதல்வரின் திட்டங்களை பூத் வாரியாக ஒவ்வொருவா் இல்லத்துக்கும் நேரடியாக சென்று திண்ணை பிரசாரம் செய்ய வேண்டும்.பாகுபாடின்றி மகளிா் உரிமைத்தொகை அனைவருக்கும் கிடைத்து விட்டதா என்பதை விசாரிக்க வேண்டும், விடுபட்ட மகளிரின் விவரங்களை சேகரித்து வைப்பதோடு, அவா்களுக்கு மகளிா் உரிமை தொகை கிடைப்பதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என ஆலோசனைகள் வழங்கினாா்.
தொடா்ந்து பூத் வாரியாக 30 சதவீதம் புதிய உறுப்பினா்களை சோ்த்தல், குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த வேலூா் மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா் முகமது சாதிக் மறைவுக்கு அஞ்சலி உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.