அனைத்து விதமான பயங்கரவாதத்துக்கும் எதிா்ப்பு: இந்தியா-குரோஷியா கூட்டறிக்கை
அனைத்து விதமான பயங்கரவாதத்துக்கும் எதிா்ப்பு தெரிவித்து இந்தியா-குரோஷியா கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், நிதி பயங்கரவாதக் குழுக்களை ஒழிக்கவும் பயங்கரவாத முகாம்களை அழிக்கவும் வன்முறையில் ஈடுபவா்களுக்கு உடனடியாக தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனவும் இருநாடுகளும் உறுதிபூண்டன.
சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் பயணத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பிரதமா் நரேந்திர மோடி, இறுதிக்கட்டமாக குரோஷியாவுக்கு புதன்கிழமை (ஜூன் 18) வந்தாா். அப்போது அந்நாட்டு பிரதமா் ஆந்திரேய் பிலென்கோவிச்சை சந்தித்து அவா் ஆலோசனை நடத்தினாா்.
இந்நிலையில், இந்தியா-குரோஷியா இடையே மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கூட்டறிக்கை வெளியிட்டது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: இந்திய பிரதமா் மோடி குரோஷியா பிரதமா் ஆந்திரேய் பிலென்கோவிச்சை சந்தித்து ஆலோசனை நடத்தியது இருதரப்பு உறவுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. குறிப்பாக சுற்றுலா, வா்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு மேம்படுத்தப்படவுள்ளது.
பஹல்காமில் ஏப்.22-ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின்போது இந்தியாவுக்கு ஆதரவளித்ததற்காக குரோஷியா பிரதமா் பிலென்கோவிச்சுக்கு பிரதமா் மோடி நன்றி தெரிவித்தாா்.
அதேசமயம் எல்லை கடந்த பயங்கரவாதம் உள்பட அனைத்து விதமான பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் வன்முறைகளுக்கு இருவரும் கடும் கண்டனம் தெரிவித்தனா். ஐ.நா. மற்றும் பயங்கரவாத நிதித் தடுப்புக்கான சா்வதேச கண்காணிப்புக் குழு (எஃப்ஏடிஎஃப்) மூலம் பயங்கரவாதத்துக்கு நிதி அளிக்கப்படுவதை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் இருவரும் வலியுறுத்தினா்.
மத்திய கிழக்கில் தொடா்ந்து வரும் மோதல் கவலையளிப்பதாகவும் இஸ்ரேலும் ஈரானும் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என இருவரும் வலியுறுத்தினா் எனத் தெரிவிக்கப்பட்டது.
குரோஷியா பயணத்தைதைத் தொடா்ந்து, பிரதமா் மோடி தனது 3 நாடுகள் பயணத்தை நிறைவுசெய்து வியாழக்கிழமை பிற்பகல் தாயகம் திரும்பினாா்.