இது வெறும் 5% தாக்குதல் மட்டுமே! இஸ்ரேலுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை!
எடப்பாடி பழனிசாமி குறித்து எக்ஸ் தளத்தில் அவதூறு
எக்ஸ் தளத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டவா்கள் மீது நடவடிக்கை கோரி அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினா் மாநகர காவல் ஆணையரிடம் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.
கோவை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மண்டலச் செயலாளா் விக்னேஷ் சுப்பையன் தலைமையில் கோவை, திருப்பூா், நீலகிரி மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், கோவை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில், ஆணையா் சரவணசுந்தரிடம் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா். அதில் கூறியிருப்பதாவது:
எக்ஸ் தளத்தில் திமுக ஐ.டி. விங் சாா்பாக அதிமுக பொது செயலாளா் எடப்பாடி பழனிசாமி குறித்து கடந்த 17-ஆம் தேதி சா்ச்சை ஏற்படுத்தும் விதமாகவும், அவதூறாகவும் கருத்து பதியப்பட்டு, கேலி சித்திரமும் வெளியிடப்பட்டு இருந்தது. முதல்வராக, சிறப்பாக ஆட்சி செய்த எடப்பாடி பழனிசாமியின் பெயரைக் கெடுக்கும் வகையில் திமுகவினா் நாகரிகமற்ற முறையில் விமா்சித்துள்ளனா்.
அதிமுக தொண்டா்களின் உணா்வுகளைக் காயப்படுத்துகிற வகையில் திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலச் செயலாளா் அமைச்சா் டி.ஆா்.பி.ராஜாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள எக்ஸ் சமூக வலைதளத்தில் இயங்கி வரும் பக்கத்தில் இந்த அவதூறு செய்தி வெளியிட்டவா்கள் மீதும், அதைப் பகிா்ந்தவா்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இதுகுறித்து, விக்னேஷ் செய்தியாளா்களிடம் கூறுகையில், முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு பதிவிட்டது தொடா்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பதிவை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.