தமிழகத்தில் பாஜகவுக்கு வலுசேர்க்கும் முயற்சி! அமித் ஷா மீண்டும் வருகை?
இது வெறும் 5% தாக்குதல் மட்டுமே! இஸ்ரேலுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை!
இஸ்ரேலுடனான போரில் குறைந்தளவிலான பலத்தையே செலுத்தியிருப்பதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்-3’ என்ற பெயரில் இஸ்ரேலின் டெல் அவீவ் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஈரானும் ஏவுகணைகளை சரமாரியாக வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்த நிலையில், இஸ்ரேலுடனான போரில் குறைந்தளவிலான பலத்தையே செலுத்தி வருவதாக ஈரான் காவல்படை மூத்த தளபதி மோசென் ரெஸேய் கூறினார்.
தொலைக்காட்சி நேர்காணலில் மோசென் பேசுகையில், இஸ்ரேலுடனான போரில், ஈரானின் ராணுவத் திறனில் 30 சதவிகிதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மோதலில் ஈரானின் மொத்தத் திறனில் வெறும் 5 சதவிகிதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
எங்களின் அனைத்து ஆயுதங்களையும் நாங்கள் இன்னும் பயன்படுத்தவில்லை. கடற்படை, எங்களின் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் திறன்களைக்கூட நாங்கள் இன்னும் பயன்படுத்தவில்லை.
தற்போதைய நிலையில், போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டால், அது இஸ்ரேலின் மறுசீரமைப்பு மற்றும் மீண்டுமொரு தாக்குதலை உருவாக்கும். மேலும், பலவீனமான எதிரியை மீண்டும் எழுப்பி விடும். தேவைப்பட்டால், ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த ஈரான் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, ஈரான் மீது இஸ்ரேல் அணுகுண்டு தாக்குதல் நடத்தினால், இஸ்ரேல் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் உறுதியளித்ததாக மோசென் கூறினார்.
இருப்பினும், பாகிஸ்தான் உறுதிகூறியதாக பாகிஸ்தான் அதிகாரிகளோ அறிக்கைகளோ எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
ஆனால், ஜூன் 14 ஆம் தேதியில் நடைபெற்ற தேசிய பேரவையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் பேசுகையில், ஈரான், யேமன், பாலஸ்தீனத்தை இஸ்ரேல் குறிவைத்துள்ளது. முஸ்லிம் நாடுகள் இப்போது ஒன்றிணையவில்லை என்றால், அவர்கள் அனைவரும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று தெரிவித்தார்.
மேலும், இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் முறிக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்திய கவாஜா, கூட்டுறவை உருவாக்குமாறு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு அழைப்பும் விடுத்தார்.
ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி மையங்கள், ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்தத் தாக்குதலில் ஈரானின் முப்படை தளபதி, சக்திவாய்ந்த துணை ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தலைமை தளபதி உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டனா்.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் மீது ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதையும் படிக்க:இந்தியாவுடன் போரை நிறுத்த வேண்டுகோள்! ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் துணை பிரதமர்!