நைஜர்: துப்பாக்கிச் சூட்டில் 34 வீரர்கள் கொலை! ராணுவம் தேடுதல் வேட்டை!
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில், ஆயுதம் ஏந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 34 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
நைஜரின் மேற்குப் பகுதியில், மாலி மற்றும் புர்கினா ஃபஸோ ஆகிய நாடுகளுடனான பகுதியில் பனிபங்கோ என்ற நகரம் அமைந்துள்ளது.
இந்த நகரத்தில், நேற்று (ஜூன் 19) காலை 9 மணியளவில், சுமார் 200-க்கும் மேற்பட்ட 2 சக்கர வாகனங்களில் வந்த ஆயுதம் ஏந்திய நபர்கள் அங்கிருந்த ராணுவ வீரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 34 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக நைஜரின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அரசுப்படைகள் கூறுகையில், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் சுமார் 12-க்கும் மேற்பட்டோரை கொன்றுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை நிலம் மற்றும் வான்வழி நடவடிக்கைகளின் மூலம் தேடி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
நைஜர், மாலி மற்றும் புர்கினா ஃபாஸோ ஆகிய மூன்று நாடுகளும், ஜிஹாதி குழுக்கள் நடத்தி வரும் உள்நாட்டு கிளர்ச்சிகளுக்கு எதிராகப் போராடி வருகின்றன.
இந்த மூன்று நாடுகளிலும், சமீபத்தில் ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சி அமைந்த நிலையில், தங்களது நாட்டிலிருந்த ஃபிரான்ஸ் படைகளை வெளியேற்றி பாதுகாப்புக்காக ரஷியாவின் உதவியைக் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஒரே இரவில் உக்ரைனின் 61 ட்ரோன்களை வீழ்த்திய ரஷியா!