ஜெய்ஸ்வால் சதம், ஷுப்மன் கில் அரைசதம்; இந்தியா வலுவான தொடக்கம்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான தொடக்கத்தைத் தந்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் திடலில் இன்று (ஜூன் 20) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
ஜெய்ஸ்வால் சதம், ஷுப்மன் கில் அரைசதம்
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இந்திய அணி 91 ரன்களுக்கு முதல் விக்கெட்டினை இழந்தது. கே.எல்.ராகுல் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின், அறிமுக வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதனையடுத்து, ஜெய்ஸ்வாலுடன் கேப்டன் ஷுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது. அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டி இருவரும் வேகமாக ரன்கள் குவித்தனர். சிறப்பாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 150 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். அதில் 16 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். மறுமுனையில் கேப்டன் ஷுப்மன் கில் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.
கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில்லின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி வலுவான தொடக்கத்தைக் கொடுத்துள்ளது.
இதையும் படிக்க: 8 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வாரா கருண் நாயர்?