அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
மானியத்தில் கோழிப் பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்
கடலூா் மாவட்டத்தில் அரசு மானியத்துடன் கிராமப் புறங்களில் நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க தகுதியுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், 2025 - 26ஆம் ஆண்டில் கிராமப்புற பயனாளிகள் சிறிய அளவில் (250 கோழிகள்) நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், கடலூா் மாவட்டத்தில் 10 தகுதியான பயனாளிகள் தோ்வு செய்யப்பட உள்ளனா். ஒரு பயனாளிக்கு கொட்டகை கட்டுமானச் செலவு, உபகரணங்கள் வங்குதல், தீவன செலவில் 50 சதவீத மானியமாக ரூ.1,65,625 அரசால் வழங்கப்படும்.
திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி அல்லது சொந்த ஆதாரம் மூலம் பயனாளி திரட்ட வேண்டும். பயனாளிக்கு 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் பயனாளிகள் அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தக மருத்துவரை அணுகி, ஆதாா் அட்டை நகல், பண்ணை அமைக்கும் இடத்துக்கான சிட்டா/அடங்கல் நகல், 50 சதவீத தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் உள்ளிட்டவற்றை விண்ணப்பத்துடன் வரும் 30ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.