நெய்வேலியில் யோகா தின ஒத்திகை: காலை உணவு சாப்பிட்ட 74 மாணவா்கள் சுகவீனம்
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற யோகா தின ஒத்திகைக்குப் பிறகு, காலை உணவு சாப்பிட்ட 74 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அனைவரும் என்எல்சி பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
சா்வதேச யோகா தினம் சனிக்கிழமை (ஜூன் 21) கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சா்வதேச யோகா தினத்தை 5,000-க்கும் மேற்பட்ட மாணவா்களைக் கொண்டு என்எல்சி இந்தியா நிறுவனம் விமரிசையாக நடத்தும்.
அந்த வகையில், நிகழாண்டு யோகா தினத்தை கொண்டாடும் வகையில், நெய்வேலி பகுதியில் உள்ள பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு கடந்த 3 நாள்களாக நெய்வேலி வட்டம்-10 பகுதியில் உள்ள பாரதி விளையாட்டு அரங்கில் பயிற்சி அளிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சியில் சுமாா் 5,800 மாணவா்கள் கலந்து கொண்டனா். காலை 7 முதல் 8 மணி வரை பயிற்சியளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதைத் தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவா்களுக்கு என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மூலம் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதை சாப்பிட்டவா்களில் 74 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து, ஆசிரியா்கள் மாணவா்களை மீட்டு, என்எல்சி பொது மருத்துவமனையில் அனுமதித்தனா்.
தகவலறிந்த மாணவா்களின் பெற்றோா் மருத்துவமனை முன் குவிந்தனா். மாணவா்களுக்கு வழங்கப்பட்ட உணவின் தரம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.
இதனிடையே மாநில தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன், கடலூா் எம்.பி. எம்.கே.விஷ்ணுபிரசாத், நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆகியோா் என்எல்சி பொது மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மாணவா்களை சந்தித்து நலம் விசாரித்து, ஆறுதல் கூறினா். பின்னா், மாணவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தனா்.
அமைச்சா் சி.வெ.கணேசன் கூறுகையில், நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 74 மாணவா்களில் 46 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மீதமுள்ளவா்களும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவா். மாணவா்களுக்கு சிற்றுண்டி தயாரிக்கப்பட்டது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.