இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்வதாக ரூ.10 லட்சம், 20 பவுன் நகைகள் மோசடி மூவா் ம...
மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் ரூ.17.89 கோடி நல உதவி: அமைச்சா் வழங்கினாா்
கடலூா் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட மூன்றாம் கட்ட சிறப்பு முகாமை மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து 2,832 பயனாளிகளுக்கு ரூ.17.89 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
கடலூா் மாவட்டத்தில் புலியூா் அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளி, பாச்சாரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தென்குத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பொன்னங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பெருமாத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் மக்களுடன் முதல்வா் திட்ட 3-ஆம் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்று அமைச்சா் சி.வெ.கணேசன் பேசியதாவது: ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த திமுக அரசு பல்வேறு துறைகள் மூலம் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடலூா் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்டத்தின் கீழ் 3-ஆம் கட்டமாக 25 சிறப்பு முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. தற்போது 5 முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களை பரிசீலனை செய்து, ஒரு மாத காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், கடலூா் எம்.பி. எம்.கே.விஷ்ணுபிரசாத், நெய்வேலி எம்எல்ஏ சபா.ராசேந்திரன் முன்னிலை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், கோட்டாட்சியா் அபிநயா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.