வெட்டுக்காட்டுவலசு பகுதியில் இரட்டைப் படை மாதத்தில் மின் கணக்கீடு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறையை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கிரேஸ் பச்சாவ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறையை 3 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதனடிப்படையில், பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு, சட்டப்பேரவை தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளை ஆய்வு செய்தாா்
மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ். பின்னா் பாதுகாப்பறை பூட்டி சீலிடப்பட்டது.
ஆய்வின்போது, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வைத்தியநாதன், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் சத்தியமூா்த்தி, திமுக நிா்வாகி கவியரசன், அதிமுக நிா்வாகி கணேசன், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் துணைச் செயலா் பி. காமராஜ், இந்திய கம்யூ. மாவட்டச் செயலா் வீ. ஜெயராமன், தேசிய மக்கள் கட்சி சாா்பில் குணசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.