தென்காசி: கழன்று ஓடிய அரசுப் பேருந்து சக்கரங்கள்; மருத்துவமனையில் 3 மாணவர்கள்; அரசு சொல்வது என்ன?
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் என்ற இடத்தில், 87 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தின், பின்புற ஆக்சில் உடைந்ததில், சக்கரங்கள் தனியாகக் கழன்று ஓடி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் காயங்களுடன் உயிர் தப்பினர்.
நேற்று காலையில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகத்திற்குச் செல்வோர் என 87 பயணிகளுடன் மதுரையிலிருந்து குற்றாலம் நோக்கிப் பயணித்த அரசு பேருந்து தென்காசி அருகில் உள்ள இடைகால் கிராமத்தைக் கடக்கும் பொழுது பேருந்தில் பின்புற ஆக்சில் சேதமடைந்து சக்கரங்கள் இரண்டும் தனியாக கழன்று ஓடியது.

இதனால் பேருந்து பெரும் சத்தத்துடன் தரையில் மோதி சுமார் 20 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நடுரோட்டில் நின்றது. இதில் பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த மாணவர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை, அருகே இருந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். மேலும் சக்கரங்கள் திடீரென கழன்று ஓடியதால் பேருந்தில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
பேருந்து தென்காசி மதுரை பிரதான சாலையில் இடைகால் வளைவில் மெதுவாகச் சென்று கொண்டிருந்த பொழுது இந்த விபத்து ஏற்பட்டதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த வழியாக வேறு எந்த வாகனங்களும் வரவில்லை என்பதாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து ஓட்டுநர், நடத்துநர் இணைந்து பயணிகளுக்கு மாற்று பேருந்து ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர்.
அரசு பேருந்துகள் முறையான பராமரிப்பு இல்லாமல் ஓட்டப்படுவதாலே இத்தகைய விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுகின்றன எனப் பொதுமக்கள் தரப்பில் கூறுகின்றனர்.

இது குறித்து அரசு போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், "இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்துக்குள்ளான பேருந்தை முறையாகப் பராமரிக்காத அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.