வால்பாறை 4 வயது குழந்தையை தூக்கி சென்ற சிறுத்தை; தேடுதல் பணியில் அதிர்ச்சி... கண்ணீரில் குடும்பம்
கோவை மாவட்டம், வால்பாறை மலைப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட எஸ்டேட்டுகள் உள்ளன. இங்கு பல ஆயிரக்கணக்கான தேயிலை தோட்டத் தொழிலாளிகள் பணியாற்றி வருகிறார்கள். அண்மை காலமாகவே அங்கு வட மாநிலங்களைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளிகள் அதிகளவில் பணியாற்றி வருகிறார்கள்.

இவர்கள் பெரும்பாலும் எஸ்டேட்டுக்கு சொந்தமான லைன் வீடுகளில் தான் தங்கி வருகிறார்கள். இந்தப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டு மாடு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும்.
இதனால் மனித – வனவிலங்கு முரண் அதிகளவு நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ்முந்தா மற்றும் மோனிகா தேவி தம்பதி பச்சைமலை எஸ்டேட்டில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் ரோஷினி (4 வயது) நேற்று இரவு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது தேயிலைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை கண் இமைக்கும் நேரத்தில் திடீரென பாய்ந்து குழந்தையை தூக்கிச் சென்றது. குழந்தையின் தாய் அலறியதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக வந்து தேடினர்.
மேலும் வனத்துறை, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து குழந்தையை தேடினார்கள். வால்பாறையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தேடுதல் பணியில் சவால் ஏற்பட்டுள்ளது. இதனிடையே குழந்தையின் தலைப் பகுதி கண்டறியப்பட்டுள்ளது.

டிரோன் கேமரா மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் சிறுமியின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதேபோல வால்பாறையில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஒரு சிறுமியை சிறுத்தை தூக்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்களால் வால்பாறை மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.