கலப்புத் திருமணம் செய்த பெண்ணால் 40 பேர் மொட்டை! பரிகாரமா? மூடநம்பிக்கையா?
குமரி: காதலி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய இளைஞர்; கொலையா தற்கொலையா? - போலீஸ் சொல்வது என்ன?
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காவுவிளை பகுதியை சேர்ந்த துரைசாமி - தனலெட்சுமி தம்பதியரின் மகன் தனுஷ்(22). இவர் குலசேகரம் காவல்ஸ்தலம் பகுதிலுள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்துள்ளார். அந்தமாணவி பிளஸ் 2 முடித்து விட்டு களியக்காவிளையிலுள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி படித்தார். இதற்கிடையே தனுஷின் குடும்பத்தினர் கோவை சின்னயம் பாளையம், ஆர்.ஜி புதூர் பகுதியில் குடியேறினர். தனுஷின் தந்தை சின்னதுரை திருச்சியில் மர வேலை செய்து வருகிறார்.
தனுஷ் கோவையில் இன்ஜினீயரிங் பட்டப்படிப்பு முடித்து அங்கேயே ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். குலசேகரம் காவல்ஸ்தலம் பகுதியைச் சேர்ந்த அந்த மாணவிக்கும் தனுஷிற்கும் இடையிலான காதல் வளர்ந்து வந்துள்ளது. அந்த இளம் பெண் கோவையிலுள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்சி படிப்பில் சேர்ந்துள்ளார். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையிலான காதல் மேலும் வளர்ந்துள்ளது.
இந்த நிலையில் இவர்கள் இருவருக்குமான காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது. இருவரும் வெவ்வேறு மதங்களையும், சாதிகளையும் சேர்ந்தவர்கள் என்பதால் இருவரது பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மாணவியின் பெற்றோர் தங்களது மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமண நிச்சயம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் மாணவியின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்த நிலையில், மணமகன் வீட்டாருக்கு காதல் விவகாரம் தெரியவந்துள்ளது. இதையடுத்து திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவில்லை. இந்த நிலையில் அந்த மாணவியின் பெற்றோர் தமது மகளின் கல்லூரி படிப்பை நிறுத்தி விட்டு அவரை வீட்டிலேயே வைத்திருந்தனர். இதனால் தனுஷுக்கு அந்த மாணவியை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அந்த மாணவியின் பெற்றோரிடம் தனுஷின் பெற்றோர் பெண் கேட்டுள்ளனர். அதற்கு மாணவியின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
விபரீத முடிவு
இதற்கிடையே காதலித்த மாணவியின் வீட்டுக்கு நேற்று முன் தினம் இரவு தனுஷ் சென்று, மாணவியை சந்திக்க முயன்றுள்ளார். ஆனால் மாணவியை அவரால் சந்திக்கவோ, பேசவோ முடியவில்லை. இதையடுத்து இரவு மாணவியின் வீட்டின் மாடியில் ஏறிய தனுஷ் மேல் மாடி படிக்கட்டின் பக்கவாட்டில் உள்ள ஹூக் கொக்கியில் நைலான் கயிற்றை கட்டி தூக்கில் தொங்கியுள்ளார். நேற்று காலையில் தனுஷ் வீட்டு மாடியில் தூக்கில் தொங்கிதபடி நிற்பதைப் பார்த்த மாணவி மற்றும் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலின்பேரில் குலசேகரம் போலீஸார் அங்குசெப்று தனிஷின் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனுஷ் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் கிடந்த அவரது பேக்கை போலீஸார் கைப்பற்றினர். அதில் அவரது லேப்டாப் மற்றும் செல்போன் இருந்தது. லேப்டாப் மற்றும் செல்போனில் தனுஷ் மற்றும் அந்த மாணவி சேர்ந்து எடுத்துக் கொண்ட படங்கள் இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தனுஷின் மரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறை விளக்கம்
தனுஷின் மரணம் கொலை என்ற ரீதியில் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. இதையடுத்து மாவட்ட காவல்துறை சார்பில் தனுஷின் மரணம் குறித்த அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
``குலசேகரம் காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட செருப்பாலூர் காவுவிளை காலணி பகுதியை சேர்ந்த துரைசாமி என்பவரது மகன் தனுஷ் (22) காவஸ்தலத்தில் உள்ள தான் காதலித்து வந்த பெண்ணின் வீட்டின் மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் 19.06.2025 அன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இறந்த நபரின் தந்தை துரைசாமி (49) கொடுத்த புகாரின் அடிப்படையில் குலசேகரம் காவல்நிலையத்தில் இயற்கைக்கு மாறான சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டது.
போலீசாரின் சம்பவ இட விசாரணையிலும், சாட்சிகள் விசாரணையிலும், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நடைபெற்ற விசாரணையிலும் இறந்துபோன தனுஷ் என்பவரும் குலசேகரம் காவஸ்தலத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் சில வருடங்களாக காதலித்து வந்ததுள்ளனர். இடையில் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். தனுஷ் மீண்டும் காதலை தொடர முயற்சி செய்துள்ளார். அதனை அந்த பெண் நிராகரித்துள்ளார். இதனால் அந்த இளைஞர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது.
இறந்து போன நபரின் உடல் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைத்து உடற்கூறு பரிசோதனை நடைபெற்றது. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையிலும் உடற்கூறு பரிசோதனை அடிப்படையிலும் இளைஞரின் மரணத்தில் எந்த வித சந்தேகமும் இல்லை என தெரியவருகிறது. இது தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே இளைஞரின் இறப்பு தொடர்பாக எவரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.”
இவ்வாறு காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.