தென்காசி: வீட்டில் குளித்து கொண்டிருந்த பெண்ணை வீடியோ எடுத்த நகராட்சி ஊழியர் சஸ்பெண்ட்
தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 24 வார்டுகள் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் இந்த 2025-26 நிதியாண்டிற்கான வரி வசூல் செய்வதற்காக நகராட்சி வசூல் பணி மேற்பார்வையாளர் மற்றும் ஊழியர்கள் சிலர் செங்கோட்டை மேலூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றபோது, அந்த வீட்டில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை வீடியோ எடுத்ததாக கூறப்பட்டது.

கடந்த 12 ஆம் தேதி செங்கோட்டை மேலூர் பகுதியில் வரி வசூல் செய்வதற்காக நகராட்சி வசூல் பணி மேற்பார்வையாளர் அனந்தராமகிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் சிலர் சென்றிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் ஒரு வீட்டில் தனியாக இருந்த பெண் குளித்துக் கொண்டிருந்ததை அறிந்த அனந்த ராமகிருஷ்ணன் தனது செல்போனில் பெண்ணை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
வீடியோ எடுப்பதை பார்த்த அப்பெண் கூச்சலிட்டு அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உடனடியாக அனந்தராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஊழியர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் இது தொடர்பாக நகராட்சி ஆணையரிடம் 13 ஆம் தேதி அந்தப் பெண் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நகராட்சி ஆணையாளர் புனிதனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பேசினோம்.

நகராட்சி ஆணையாளர் கூறுகையில் "இந்தச் சம்பவம் நடந்ததாக எனக்கு அந்தப் பெண் புகார் மனு ஒன்றை அளித்தார். பின்னர் நான் நகராட்சி பொறியாளர் கண்ணன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து இருதரப்பினரிடையும் விசாரணை நடத்தியதில், வரி வசூல் மேற்பார்வையாளரான அனந்தராமன் தவறு செய்தது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த விசாரணை 18 ஆம் தேதி முடிவடைந்ததை தொடர்ந்து அனந்த ராமகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளேன்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எங்கு நடந்தாலும் சட்டரீதியாக அதனை விசாரணை செய்து அவர்களுக்கு தண்டனை வழங்குவதில் எந்த தவறும் நடந்து விடக்கூடாது என்பதற்காக விசாரணை நடத்தி உறுதி செய்யப்பட்ட பின்னர் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளேன்" என கூறினார்.